144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்தார்.
- மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும்
- எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை; அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்;
- மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
- வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்பட்டுள்ளது
- தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது
- தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்
- வீடுகளுக்கு டோக்கன் கொடுக்கும் போதே ரூ1,000 நிதி உதவியும் வழங்கப்படும்
- அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ரூ3,000 உதவித் தொகை வழங்கப்படும்
இன்று காலை வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முகாம்களில் உள்ள தொழிலாளர்களை சந்தித்தேன். வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்து தமிழகத்தில் தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை தமிழக அரசு செய்துள்ளது. உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர்… என்று கூறினார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில்,
அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வருவதற்கு தடையில்லை. அவை வேறு மாநிலங்களில் இருந்து இங்கு வர வேண்டியுள்ளது. பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், அத்யாவசிய பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் இயக்கப்படாததாலும் ஒரு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது அத்யாவசிய பொருள்கள் கொண்டு செல்வதற்கு மாநிலங்கள் தடை விதிக்கக்கூடாது என பிரதமர் கூறியுள்ளதால் பிரச்னை தீரும் என்று நம்புகிறோம்.
சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோயின் வீரியத்தை புரிந்து கொள்ளாமல், சிலர் விளையாட்டுத் தனமாக டூவிலரிலும், கார்களிலும் பயணிக்கின்றனர்.
அரசு கேட்டுக் கொள்வதெல்லாம் நோயின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த வைரசுக்கு எந்த மருந்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பரவாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!
144 தடை உத்தரவு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அல்ல; மக்களைக் காப்பாற்றுவதற்காகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது அத்யாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வரலாம் என்றாலும், தினசரி வர வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முறை வெளியே வரும் போது, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
மக்கள் தான் இதனைக் கடைபிடிக்க வேண்டும். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பது கிடையாது. இனிமேல் சட்டம் தன் கடமையை செய்யும்.
மக்களுக்கு அரசு எவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு ஒத்துழைப்பு கொடுக்கும். மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க தவறினால் 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்.
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது. தமிழக அரசு அறிவித்த நிவாரண பொருட்கள், ரேசன் கடைகளில் இந்த மாத இறுதி வரை வழங்கப்படும். வீடுகளுக்கு சென்று டோக்கன் கொடுக்கப்படும் போதே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அரசு அங்கீகரித்த பத்திரிகையாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.