சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் –பகுதி-13
தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
‘உஷ்ட்ர கண்டக பக்ஷண நியாய:’
ஒட்டகம் முள் இலையைத் தின்பது போல!
உஷ்ட்ர – ஒட்டகம். கண்டக: – முள். பக்ஷணம் – புசிப்பது.
பாலைவன ஓடமாக அழைக்கப்படும் ஒட்டகம் சுமார் ஐநூறு கிலோ எடை கொண்ட ஒரு விலங்கு. இதன் கழுத்து 5-6 அடி உயரம் இருக்கும்.
ஒட்டகம் என்றதும் அரேபியாவைச் சேர்ந்தது என்று நினைப்போம். ஆனால் ஒட்டகம் ஆஞ்சனேயஸ்வாமியின் வாகனம். அனுமனின் கொடியில் ஒட்டகம் இருக்கும். ஒட்டகம் பற்றி மகாபாரதத்தில் குறிப்பு உள்ளது.
ஒட்டகம் உயரமான மரங்களின் மேல் கிளைகளைக் கூட எளிதாக பற்றி இலைகளைத் தின்னக் கூடியது. ஆனால் “மூளைக்கு ஒரு யோசனை, நாக்குக்கு ஒரு ருசி” என்று கூறுவது போல ஒட்டகம் முட்செடியின் இலைகளைத் தின்பதற்கு விரும்பும். சாதாரண மரங்களின் இலைகள் அதற்கு ருசிப்பதில்லை. “அழகான கானகத்தில் ஒட்டகத்தை விட்டு வந்தால் அது முட்செடியின் இலைகளுக்காக தேடும்” என்று ஒரு புலவர் பாடிச் சென்றார். இவ்விதமாக ஒட்டகத்திற்கு முள் இலைகள் விருப்பம் என்பதே ‘உஷ்ட்ர கண்டக பக்ஷண நியாயம்’.
மீடியா டிஆர்பி என்ற முள்:-
இதே போல் சமுதாயத்தில் சிலர் எப்போதும் தீயவர்களின் நட்பையே விரும்புவர். ஒவ்வொரு நாளும் நல்ல சேவைச் செயலகள், அறிவியல், தார்மீக நற்பணிகள், அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடந்தாலும் இவர்களுக்கு அவை கண்ணில் படாது. செய்தி ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் எதிர்மறை செய்திகளையே முன்னிலைப்படுத்துகின்றன. இதுவே ‘உஷ்ட்ர கண்டக பக்ஷணம்’ என்பது.
செய்தித்தாளைப் படிக்கும் வாசகருக்கு சமுதாயம் சர்வ நாசமாகி விட்டது. எங்கு பார்த்தாலும் மோசம். எங்கு பார்த்தாலும் வன்முறை, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, ஊழல் என்று தோன்றுவதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. நெகடிவ் செய்திகள் என்றால் மீடியாவுக்கு கொண்டாட்டம். நேர்மறைச் செய்திகளை மக்கள் விரும்பமாட்டார்கள் என்பது இவர்களின் முடிவு. அவற்றுக்கு மதிப்பு இல்லை என்று வெட்கமின்றி கூறிக் கொள்ளும் சேனல்களின் வரலாறு நாமறிந்ததே. ‘சதக கவி’ இவ்வாறு கூறுகிறார்… “பந்தி புரத மெச்சு – பன்னீரு மெச்சுனா?” – “பன்றிக்கு சேறுதான் பிடிக்கும். பன்னீரை விரும்புமா?”.
துரியோதனனின் கண்கள்:-
ஹஸ்தினாபுரத்தில் துஷ்டர்கள் யாராவது உள்ளார்களா என்று தேடி வரும்படி தர்மபுத்திரனை ஒரு முறை பணித்தனர். அவனுக்கு நகரமெங்கும் அலைந்தாலும் ஒரு தீயவன் கூட கண்ணில் படவில்லை. துரியோதனனைப் பணித்தபோது அவனுக்கு நல்லவர் ஒருவர் கூட கண்ணில் படவில்லை. இதுவும் உஷ்ட்ர கண்டக பக்ஷணத்திற்கு உதாரணம்.
துஷ்டர்களுக்கு புராணங்களில் உள்ள எதிர்மறை கதாபாத்திரங்களே உதாரணப் புருஷர்களாகத் தென்படுவர். இடதுசாரிகள் புராணங்களையும் புராண புருஷர்களையும் அவமதித்து ஏளனம் செய்து அவையெல்லாம் கற்பனைக் கதைகள் என்கிறார்கள். ஆனால் மகிஷாசுரனையும் நரகாசுரனையும் வழிபடுகிறார்கள். உஷ்ட்ர கண்டக பக்ஷணத்திற்கு இதைவிட சிறந்த உதராணம் வேறென்ன இருக்கப் போகிறது?.
விஷம் தோய்த்த எழுதுகோல்கள்:-
ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களில் உள்ள உயர்ந்த பாத்திரங்களை மக்களின் முன் ஆதரிசமாக வைக்காமல் அந்த பாத்திரங்களை வக்கிரமாக விமரிசிக்கும் இயல்பு கொண்ட ‘உஷ்ட்ர’ இடதுசாரிகளும் விஷத்தில் தோய்த்த எழுதுகோல் கொண்ட நவீன சூர்ப்பனகைகளும் – எதற்கும் துணிந்த இலக்கியவாதிகள். இவர்களும் உஷ்ட்ர கண்டக பக்ஷண நியாயத்திற்கு உதாரணங்களே!.
ஓட்டைகளைத் தேடுபவர்கள்:-
தேசத்தில் பல மடங்களும் கோவில்களும் அன்னதானம், கல்வி நிலையங்கள், கோசாலைகள் போன்ற மக்கள் நல சேவைகளை நடத்தி வருகின்றன. செய்தி ஊடகங்கள் அத்தகைய நற்செயல்களில் ஓட்டைகளைத் தேடி, காஷாயம் தரித்த நிர்வாகிகள் மீது தவறு கண்டுபிடிப்பதற்கு கேமேராவைப் பிடித்துக் கொண்டு அலைகின்றன. தீய எண்ணம் கொண்ட இத்தகைய விமரிசகர்களும் இந்த உஷ்ட்ர கண்டக பக்ஷண நியாயத்திற்கு உதாரணங்களே.
‘உஷ்ட்ர கண்டக பக்ஷண’ நியாயத்திற்கு முழுவதும் சரியான உதராணமாக தேசத் துரோக எண்ணம் கொண்ட, ‘பொதுவுடமையாளர்’ என்று கூறிக் கொள்பவர்களைச் சொல்லலாம். இவர்கள் அமைதியையும் உலகில் சர்வ ஜனங்களின் நலனையும் விரும்பும் ஹிந்து மதத்தின் மேல் கடினமான வெறுப்பைக் கக்கும் வேலையை செவ்வனே செய்பவர்கள். ‘மெக்காலேக்கள், மார்க்சிஸ்ட்கள், மத்ராசா பயிற்சிபெற்ற ஜிஹாதீஸ், மிஷினநரீஸ்’ என்ற இந்த ‘துஷ்ட சதுஷ்டயம்’ அண்மையில் dismantling Global Hindutva என்ற இணைய மாநாட்டை நடத்தினர். ஒரு புறம் தாலிபான்களின் வன்முறை நடக்கையில் ஹிந்துத்துவம் மீது வெறுப்பை உமிழ்வது ‘உஷ்ட்ர’ குணமே அல்லவா?
‘பசுவில் ரக்தம், பால் இரண்டும் இருக்கும். மனிதர்கள் பாலைக் குடிக்கையில் கொசுக்கள் ரத்தத்தைக் குடிக்கின்றன’ என்றார் ஒரு கவிஞர். நல்லவர்கள் எப்போதும் நல்லவற்றையே ஏற்பார்கள். தீயவர்கள் எப்போதும் தீயவற்றையே விரும்புவார்கள். அது அவர்களின் இயல்பு. அதை எப்படி விடுவார்கள்?
இதே கருத்தைக் கூறும் சுலோகம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது…
வ்யாக்ரஸ்துப்யதி கானனே சுகஹனாம் சிம்ஹோ குஹாம் சேவதே
ஹம்சோஹ்னாய ச பத்மினம் குசுமிதாம் க்ருத்ர: ஸ்மசான ஸ்தலீம் |
சாது: சத்க்ருதி சாதுமேவ பஜதே நீசோபி நீசம் ஜனம்
யா யஸ்ய ப்ரக்ருதி: ஸ்வபாவ ஜனிதா கேனாபி ந த்யஜ்யதே ||
(சூக்தி கோசம்).
பொருள்:- பெரிய புலி காட்டில் மகிழ்ச்சியாக இருக்கும். சிங்கம் மிகவும் ஆழமான குகையில் இருக்கும். ஹம்சம் மலர்ந்த தாமரைக் கொடியின் அருகில் விரைவில் சேரும். கழுகு மயானத்தில் வசிக்கும். நீசர்கள் நீசர்களின் அருகாமையைச் சேருவார்கள். யாருமே தம் இயல்பான குணத்தை விடமாட்டார்கள்.
உஷ்ட்ர கண்டக பக்ஷண நியாயத்திற்கு அண்மை உதாரணங்கள்:-
அயோத்தியில் உள்ள ராம ஜன்ம பூமி கோவிலுக்கு நிதி சேகரித்த போது ஆத்திக மக்கள் முன்வந்த விதம் அபூர்வமானது. எதிர்பார்ப்பை விட அதிகம் சமர்பித்தார்கள். இதனைப் பொறுக்க முடியாத நாத்திகக் கும்பல்கள் இல்லாததும் பொல்லாததும் கற்பனை செய்து மக்களிடம் பரப்ப முயன்று தோல்வியடைந்தனர்.
‘உஷ்ட்ர கண்டக பக்ஷண நியாயம்’ இது போன்ற துஷ்ட சுபாவங்களைப் பற்றித்தான் கூறுகிறது. முட்செடியின் இலைகளைத் தின்பதில் ஒட்டகம் அனுபவிக்கும் ஆனந்தம் பற்றி ஒரு சுலோகம்…
கர்ணாம்ருதம் சூக்திரசம் விம்ருஜ்ய தோஷேஷு யத்ன: சுமஹான் கலஸ்ய|அவேக்ஷதே கேலிவனம் ப்ரவிஸ்ய க்ரமேலக கண்டக ஜாலமேவ ||
(விக்ரமாதித்ய விஜயம்)
பொருள்:- அழகான வனத்திற்குச் செல்லும் ஒட்டகம் (க்ரமேலக:) அங்கிருக்கும் அழகான மரங்களை திரும்பிக் கூட பார்க்காது. இயல்பான குணத்தின் காரணமாக முட் செடிகளுக்காக தேடித் தேடி அதனையே தின்னும். அதேபோல் சமுதாயத்தில் தீய குணம் கொண்டவர்கள் பிறரிடம் குற்றங்களை மட்டுமே பார்த்து அதில் மகிழ்வார்கள். பிறரிடம் இருக்கும் நற்குணங்களைப் பார்க்கக் கூட மாட்டார்கள்.
—0o0—