கொரோனா வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக, 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கம் உறுதியாகி உள்ள நபர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவும் ஆபத்து அதிகம் உள்ளதாக 6 மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்காணா ஆகிய மாநிலங்களில் 31 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தில்லியில் இரண்டு பேர், குருகிராம், ஐதராபாத், காஸியாபாத் நகரங்களில் தலா ஒருவர், ஆக்ராவில் 6 பேர், ஜெய்பூரில் ஒரு இந்தியர் மற்றும் 16 இத்தாலியர் உள்பட 17 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
31வது நபராக தில்லியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் உத்தம் நகரைச் சேர்ந்தவர் என்றும் அண்மையில் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், ஈரான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 13 பேர், அமிர்தசரஸ் விடுதியில் தனியாக வைக்கப்பட்டு, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், தொடர்ந்து பல அமைச்சகங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.