புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாருக்கு அடுத்தடுத்து புகார் வந்தன.
எஸ்.பி உத்தரவின் பேரில், உதவி கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது. சிறப்புத் தனிப்படையில் திருக்கோகர்ணம் போலீஸாரும் இடம்பெற்றிருந்தனர்.
திருக்கோகர்ணம், கணேஷ் நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட அன்னை அபிராமி நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம், காந்தி நகர், சின்னப்பா நகர், டைமண்ட் நகர், மச்சுவாடி, டி.வி.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், பாலியல் தொழில் நடந்த வீடுகளை அடையாளம் கண்டனர். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த 5 பெண்கள், 8 ஆண் புரோக்கர்கள் என மொத்தம் 13 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும், அவர்கள் விபசாரத்துக்குப் பயன்படுத்திய 4 கார்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். ரூ.3,500 பணமும் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து அவர்களைப் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபற்றி போலீஸார் கூறும்போது, “மிகவும் ரகசியமாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எஸ்.பி உத்தரவின் பேரில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ரகசிய சோதனை மேற்கொண்டதால், கூண்டோடு சிக்கியுள்ளனர்.
தொடர்ந்து, இன்னும் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ள உள்ளோம். பாலியல் தொழில் நடப்பது குறித்து தகவல் கிடைத்தால், உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கலாம்” என்றனர்.