ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் மக்கள் பகுதியான மும்பையின் தாராவியில் கொரோனா தொற்று எண்ணிக்கை 100-ஐக் கடந்தது. 15 புதிய தொற்றுக்களுடன் மொத்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இந்தப் பகுதியில் மட்டும் 101 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 10 பேர் இதுவரை இப்பகுதியில் மரணமடைந்துள்ளனர். 62 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனையில் மரணமடைந்தார். மட்டுங்கா தொழிலாளர் முகாமில் 3 பேருக்கு புதிதாகக் கொரோனா பரவியுள்ளது.
தாராவியில் சுமார் 8 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பகுதி வைரஸ் ஹாட்ஸ்பாட் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் 9 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் போலீசார் தடுப்பு இட்டு காவல் பணி புரிந்து வருகின்றனர். இந்த ஹாட்ஸ்பாட் பகுதியில் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதியில்லை, அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வாசலுக்கு வரும்.
2073 கொரோனா வைரஸ் கேஸ்களுடன் நாட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது மும்பை. மும்பையின் 1.2 கோடி மக்கள் தொகையும் முழு லாக்-டவுனில் இருந்து வருகின்றனர்.