மும்பை தேசாய் மருத்துவமனையில் (Desai Hospital) கடந்த ஏப்ரல் 24 அன்று 56 வயது மதிக்கத்தக்க ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஒருவழியாக சடலத்தை எடுத்துச்செல்ல அதிகாரிகளிடம் அனுமதிபெற்று, கர்நாடகாவில் இருக்கும் சொந்த ஊரான மண்டியா மாவட்டத்துக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர் குடும்பத்தினர். இந்த நிலையில், போகும்வழியில் லிஃப்ட் கொடுத்து உதவுமாறு கேட்ட தாய்க்கும் மகனுக்கும் உதவியளித்து உடன் அழைத்துசென்றுள்ளனர்.
சொந்த ஊரை அடைந்து இறந்தவரின் உடலை எரித்தபின் ஆம்புலன்ஸில் பயணித்த 6 பேரையும் பரிசோதித்ததில் அதில் 3 பேருக்கு கொரோனா பாசிடிவ் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் மகனுக்கும் உறவினர் ஒருவருக்கும் லிஃப்ட் கேட்டு பயணித்த தாய்க்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. வங்கியில் பணிபுரியும் இறந்தவரின் மகனுக்குத்தான் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் மூலமாகத்தான் மற்றவர்களுக்கும் பரவியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இதையடுத்து, ஆம்புலன்ஸில் வந்த 6 பேர் உட்பட அவர்களுடன் நெருக்கமாக இருந்த அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 10 கொரோனா பாசிடிவ் கேஸ்களுடன் இருந்த மாண்டியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவர்களோடு சேர்த்து 14 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் 11,506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பையில்தான் 7,812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அங்கிருந்து வெளியூர் செல்பவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. `
ஒரு சடலத்தை எடுத்துச் செல்ல எதற்கு 6 பேருக்கு அனுமதியளிக்க வேண்டும், மும்பையிலிருந்து எந்தப் பரிசோதனையும் செய்யாமல் மற்ற மாநிலத்துக்குப் பயணிக்க அனுமதியளித்தது மும்பை மாவட்ட நிர்வாகத்தின் குறைபாடுதான்’ என்று மாண்டியா மாவட்ட துணை ஆணையர் டாக்டர். எம். வி. வெங்கடேஷ் கூறினார்.
ஆனால், மும்பை மாவட்ட நிர்வாகம் நடந்த சம்பவத்துக்கு முக்கிய அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் எனக் கூறியது. இதற்கிடையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி `இது மாண்டியா மாவட்ட நிர்வாகத்தின் தோல்வி’ என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் மற்ற மாவட்டங்களைவிட தலைநகரான பெங்களூரில் அதிக கொரோனா கேஸ்கள் உறுதிசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.