கொரோனா வைரஸ் ஏற்கெனவே மக்களின் உயிர்களைப் பந்தாடி வரும் நிலையில், இப்போது புதுவித வைரஸ் ஒன்று மொபைல் போன்களில் ஊடுருவி மக்களின் வங்கி சேமிப்பை காலி செய்து வருகிறது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர் சர்வதேச போலீஸார்.
சர்வதேச போலீசார் அறிவுறுத்தலின்படி ‘செர்பெரஸ்’ ( cerberus virus ) என்ற ஸ்மார்ட் போன் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸாருக்கும் சிபிஐ., கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கொரோனா குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்றும், முதலில் கொரோனா தகவல்கள் குறித்த குறுந்தகவலை ஸ்மார்ட்போனுக்கு அனுப்பி, அதில் உள்ள இணைப்பை ‘கிளிக்’ செய்யுமாறு அறிவுறுத்தும் என்றும் கூறுகின்றனர். அவ்வாறு செய்தால் உடனே ‘செர்பெரஸ்’ வைரஸ் தன்னிச்சையாக ஸ்மார்ட்போனில் புகுந்து வங்கி கணக்கு ‘கிரெடிட் கார்டு’ உள்ளிட்ட தகவல்களைத் திருடி விடுமாம்.
வங்கியின் சாப்ட்வேர் தகவல் போல், டூ ஃபேக்டர் ஆதண்டிகேஷன் முறையில் இரு முறை அங்கீகரிக்கும் பாதுகாப்பு அம்சத்துடன் வருவதால் பலரும் இதனை உண்மையான வங்கித் தகவல் போல் ஏமாந்து விடுகின்றனர். அதனால் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வரும் எந்த வெப்சைட் லிங்க்கையும் ‘கிளிக்’ செய்து விடாதீர்கள் என்ற எச்சரிக்கையை சி.பி.ஐ. கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.