ஐபிஎல் 2022 : மும்பை vs குஜராத்
– K. V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, மே ஆறாம் நாள் மும்பை, குஜராத் அணிகளுக்கிடையே மும்பை ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 51ஆவது போட்டி நடந்தது.
மும்பை அணி குஜராத் அணியை வென்றது. மும்பை அணி (177/7, இஷான் கிஷன் 45, டிம் டேவிட் 44, ரோஹித் ஷர்மா 43ரஷீத் கான் 2/24) குஜராத் அணி (172/5, சஹா 55, ஷுப்மன் கில் 52, முருகன் அஷ்வின் 2/29) வென்றது.
டாஸ் வென்ற குஜராத் அணி மும்பை அணியை மட்டையாடச் சொன்னது. ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதலில் ரோஹித்; அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ்; அதன் பின்னர் இஷான் கிஷன் ஆட்டமிழந்தபோது அணியின் ஸ்கோர் 111.
மும்பை அணி 30 பந்துகளில் 50 ரன்னும் 64 பந்துகளில் 100 ரன்னும் அடித்தனர். பொலார்ட் சோபிக்கவில்லை. அதன் பின்னர் திலக் வர்மா (21 ரன்) டிம் டேவிட் இணைந்து 38 ரன்கள் சேர்த்தனர். இருபது ஓவர் முடிவில் மும்பை அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 177 ரன் எடுத்தது.
குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சஹா, சுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடினர். இவர்கள் 30 பந்துகளில் 50 ரன்னும் 66 பந்துகளில் 100 ரன்னும் அடித்தனர். அதன் பின்னர் ஹர்திக பாண்ட்யா (24 ரன்), சாய் சுதர்ஷன் (14 ரன்), டேவிட் மில்லர் 19 ரன்) ஆகியோரும் ரன்ரேட்டை நல்ல நிலையில் கொண்டு சென்றனர். 12 பந்துகளில் 20 ரன்கள் அடிக்கவேண்டிய நிலை.
கடைசி ஓவரில் 6 பந்துகளில் 9 ரன் அடிக்க வேண்டியிருந்தது. களத்தில் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்கள் திவாத்தியா, டேவிட் மில்லர், ரஷீத் கான் இருந்தனர். ஆனால் அவர்களால் ஒரு நான்கோ அல்லது ஓர் ஆறோ அடிக்க முடியவில்லை. எனவே மும்பை அணி ஐந்து ரன் கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை.