ஐபிஎல் 2022 – இரண்டு போட்டிகள்
– K. V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, மே ஏழாம் நாள் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் போட்டி, ஐபிஎல்லின் 52ஆவது போட்டி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாவது போட்டி, ஐபிஎல்லின் 53ஆவது போட்டி, புனே கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ, கொல்கொத்தா அணிகளுக்கிடையே நடந்தது.
பஞ்சாப் vs ராஜஸ்தான்
பஞ்சாப் அணி (189/5, பெயிர்ஸ்டோ 56, ஜித்தேஷ் ஷர்மா 38, லிவிங்ஸ்டோன் 22. சாஹல் 3/28) ராஜஸ்தான் அணியிடம் (190/4, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 68, படிக்கல் 31, பட்லர் 30, சாம்சன் 23, அர்ஷதீப் 2/29) தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. தொடக்க வீரர் ஷிகர் தவான் ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ ராஜபக்ஷா (27 ரன்), அகர்வால் (15 ரன்) ஆகியோருடன் இணைந்து 14.4ஆவது ஓவர் வரை விளையாடி அணியின் ஸ்கோரை 119 வரை கொண்டுவந்தார். அதன் பின்னர் ஜித்தேஷ் ஷர்மா (38 ரன்), விலிங்ஸ்டோன் (22 ரன்) ஆகியோர் அதிரடியாக ரன் குவித்தனர். அதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 189 ரன் எடுத்தது.
பின்னர் ஆடவந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் ஆறு ஓவர்களில் அந்த அணி 67 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் வந்த தேவ்தத் படிக்கல், ஹெட்மயர் ஆகியோர் பதட்டமில்லாமல் ஆடி 19.4 ஓவரில் 190 ரன் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
லக்னோ vs கொல்கொத்தா
லக்னோ அணி (176/7, டி காக் 50, தீபக் ஹூடா 41, க்ருணால் பாண்ட்யா 25, ஸ்டோயினிஸ் 28, ரசல் 2/22) கொல்கொத்தா அணியை (101 ரன்னிற்கு ஆல் ஆவுட், ரசல் 45, சுனி ரரேன் 22, ஆவேஷ் கான் 3/19, ஹோல்டர் 3/31) வென்றது.
டாஸ் வென்ற கொல்கொத்தா அணி பந்துவீசத் தீர்மானித்தது.
முதல் ஓவரில் லக்னோ அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லக்னோ அணியின் அணித்தலைவரும் தொடக்க வீரருமான கே.எல். ராகுல் முதல் ஓவர், ஐந்தாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் டி காக், ஹூடா இருவரும் அடுத்த ஆறு ஒவர்களில் 73 ரன்கள் சேர்த்தனர். விளையாடிய அனைத்து பேட்டர்களும் (ராகுலைத் தவிர) சிறப்பாகவே ஆடினர். எனவே 20 ஓவர் முடிவில் லக்னோ அணி, ஏழு விக்கட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது.
பின்னர் விளையாட வந்த கொல்கொத்தா அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. ஏழு ஓவருக்குள் அணியின் முக்கியமான பேட்டர்கள் நால்வர் ஆட்டமிழந்தனர்; அணியின் ஸ்கோர் அப்போது ஸ்கோர் 4/25. அதன் பின்னர் ரசல் 19 பந்துகளில் 45 ரன் அடித்தார்; அவருடன் ஜோடி சேர்ந்த நரேன் 12 பந்துகளில் 22 ரன் அடித்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டாகினர். எனவே கொல்கொத்தா அணி 14.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 101 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே லக்னோ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கொத்தா அணியை வெற்றிகொண்டது.
புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகள் மற்றும் அதிக ரன்ரேட்டுடன் லக்னோ அணி முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.