ஐ.பி.எல் 2022 – ராஜஸ்தான் vs டெல்லி
– K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, ஐபிஎல்லின் 58ஆவது ஆட்டம் மும்பை டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கிடையே நடந்தது. ராஜஸ்தான் அணி (160/6, அஷ்வின் 50, படிக்கல் 48, சக்கரியா, நார்ஜே, மார்ஷ் தலா இரண்டு விக்கட்) டெல்லி அணியிடம் (161/2, வார்னர் 52*, மார்ஷ் 89) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவுசெய்தது. முதலில் மட்டையாட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், அதிரடி ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் ஏழு ரன்னுக்கு மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அப்போது அஷ்வினை ஆட அனுப்பினார் ராஜஸ்தான் அணித்தலைவர் சஞ்சு சாம்சன். அஷ்வின் 38 பந்துகள் விளையாடி, 2 சிக்சர், 4 ஃபோருடன் 50 ரன்கள் எடுத்தார். 14.1 ஓவரில் அவர் ஆட்டமிழக்கும்போது ஸ்கோர் 107/3.
அதன் பின்னர் தேவதத் படிக்கலும் பிற வீரர்களும் சேர்ந்து, 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை ஆறு விக்கட் இழப்பிற்கு 160 என உயர்த்தினர்.
அடையக்கூடிய இலக்கினை சேஸ் செய்யத் தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் ஸ்ரீகர் பரத் முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான வார்னருடன் மார்ஷ் இணைந்து அணியின் ஸ்கோரை 144 வரை உயர்த்தினார்.
மார்ஷ் 89 ரன்னில் ஆட்டமிழந்த பின்னர் ஆட வந்த ரிஷ்ப் பந்த் வெற்றிக் கணக்கை முடித்து வைத்தார். இந்த தோல்விக்குப் பின்னரும் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை சென்னை, மும்பை அணிகளுக்கிடையே போட்டி நடைபெறும்.