பாஜக வளர்ச்சி அடைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக வளர்ச்சி அடைவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று, மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட வைத்துவிட்டு, இப்போது மோடிக்கு மாநிலத்தில் அதிகரித்து வரும் செல்வாக்கைக் கண்டு பயந்து போய் திடீரென ஒரு குற்றச் சாட்டை காங்கிரஸ் மீது வைத்துள்லார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி!
ராய்கஞ்ச் நகரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட காங்கிரஸ் கட்சி தவறி விட்டது என்று குற்றம் சாட்டினார்.
வலிமையாகப் போராடாததால்தான், பாஜக வளர்ச்சி அடைய வழிவகை ஏற்பட்டடது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க விரும்பினால் மற்றவர்களின் ஆதரவை அவசியம் அவர் கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு, புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் இணைந்து பணியாற்றுவோம் என்று மம்தா பானர்ஜி காங்கிரஸுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், பிரதமர் நாற்காலி மீதுள்ள கனவில், காங்கிரஸை கூட்டணியிலேயே சேர்த்துக் கொள்ளவில்லை மம்தா பானர்ஜி. கிட்டத்தட்ட கூட்டணி வைத்துள்ள எல்லா மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவான தொகுதிகளையே மகா கட்பந்தன் எனும் மெகா கூட்டணியில் இடம் ஒதுக்கப் பட்டது. இதைக் கண்டு வெறுத்துப் போய், காங்கிரஸ் கட்சி, ஆந்திரம், தில்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், பீகார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தனித்தே போட்டியிட தீர்மானித்தது. அதற்கு முன்னர் வரை மெகா கூட்டணி என்று கூறிக் கொண்டிருந்தவர்கள், காங்கிரஸை மட்டும் கழற்றிவிட்டார்கள். அதில் முதலாமவர் மம்தா பானர்ஜியே!
மாநிலத்தில் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, மக்களை மிரட்டி, தங்களுக்கு ஓட்டு போடும் படி மம்தா கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடிக்கு எதிராக வாள் சுற்றி வந்ததால் தனக்கு தலைமைப் பீடம் கிடைக்கும் எனக் காத்திருந்த மம்தா, தற்போது, நான்கு முனைப் போட்டி நடப்பதால், தனக்கான வாய்ப்பு குறைந்து வருவது கண்டு அச்சத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் மோடியின் செல்வாக்கு உயர்ந்து வருவது, அண்மைக்கால அவரது பேரணிக்கு வந்த கூட்டத்தினரை வைத்து வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.
இந்நிலையில், தனது அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளதால், காங்கிரஸை குற்றம்சாட்டிப் பேசி வருகிறார் மம்தா பானர்ஜி.