வாலிபால் போட்டியில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இளைஞர் ஒருவரை ஹோட்டலில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தனர் ஐந்து பேர்! அந்த இளைஞர்கள் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் தப்ப முயன்றபோது விழுந்து கை கால்கள் உடைந்த நிலையில் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது!
பலர் பார்த்திருக்க வெட்டிக் கொன்ற இளைஞர்கள் 5 பேர் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை கால் உடைந்ததாக சமூக வலைத் தளங்களில் இது குறித்து கேலியும் கிண்டலும் பதிவு செய்யப்பட்டுள்ளது!
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையை அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் என்பவரின் 23 வயது மகன் மகேஷ். இவர் கடந்த 16ம் தேதி மதியம் நண்பர்களைப் பார்ப்பதற்காக திருத்தணி நீதிமன்றத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் மகேஷை வெட்டியது. உயிருக்கு பயந்து அங்கிருந்த ஹோட்டலில் புகுந்த மகேஷை அந்த கும்பல் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தது.
இது தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி டிஎஸ்பி சேகர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. அவர்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மர்ம கும்பல் வேப்பம்பட்டு பகுதியை அடுத்த பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து தனிப் படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கொலை செய்த 4 இளைஞர்கள் மற்றும் கார் ஓட்டுநர் என 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜப்பான் என்கிற விமல்ராஜ் (25 வயது), அஜித்குமார் (25 வயது) ராஜ்குமார் (25 வயது), கோபிராஜ் (26 வயது), கார் ஓட்டுநர் சதீஷ் (26 வயது) என்பது தெரியவந்தது.
இவர்கள் பெருமாள்பட்டில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் விரட்டிச் சென்று அவர்களைப் பிடித்தனர்! அப்போது நான்கு பேரின் கை கால்கள் உடைந்தன! தொடர்ந்து கொலை செய்த இளைஞர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்த பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்!
மேலும் இதுகுறித்த விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெருமாள்பட்டு பகுதியில் நடந்த வாலிபால் போட்டியில் விமல்ராஜ் மற்றும் மகேஷ் நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டு கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான் கடந்த 16 ஆம் தேதி மகேசை விமல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஓட ஓட விரட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
திருத்தணி போலீசார் கைதான இந்த ஐந்து இளைஞர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் கைகால்களில் கட்டுகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்டு சிலர், கட்டு போட்டதற்கு மேல் ரத்தம் கசிவதால், இது நாடகக் கட்டு என்றும், யாரை ஏமாற்ற இவ்வாறு செய்கிறார்கள் என்றும் கருத்துகளை பதிவு செய்தனர்.
இருப்பினும், பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையில் அடிபட்டு கட்டுபோடப் பட்டவர்கள் என்றவாறு சமூகத் தளங்களில் இந்தப் படம் வைரலானது.
2 நாட்களுக்கு முன் ஹோட்டலில் மக்கள் முன் பதைபதக்க வெட்டி கொன்றவர்கள் இவர்கள்!
வழக்கம் போல், சென்னை காவல்நிலையத்தில் பாத்துரூம் பாசையில் வழுக்கி விழுந்து கை கால்???????????????? உடைந்தது..????????
வாழ்த்துக்கள் எடப்பாடி அரசுக்கு!
- வாட்ஸ்அப்பில் வைரலாகும் கமெண்ட்