ஸ்டாலின் ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
தமிழக சுகாதாரத்துறையை மேம்படுத்தவும், மின்துறை, தொழில்துறை ஆகியவற்றில் முதலீட்டை ஈர்க்கவும் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற எடப்பாடி பழனிச்சாமி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை…
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும், பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளேன்.
வெளிநாட்டில் உள்ள தொழில்துறை முன்னேற்றங்களைப் பார்வை யிடுவதுடன், தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளேன்.
ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? அவரும் சொன்னதில்லை. நீங்களும் அவரிடம் கேட்டதில்லை. அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற மர்மத்தை விளக்குவாரா?
ஸ்டாலின் அடிக்கடி சொந்த விஷயத்திற்காக வெளிநாடு செல்வதாகக் கூறுகிறார்! அந்த சொந்த விஷயம் தான் என்ன?
தமிழகத்தின் வளர்ச்சிக்காக நான் வெளிநாட்டுப் பயணம் செல்வதை அவர் கொச்சைப்படுத்தி வருகிறார். சாதாரண விவசாயியான நான் மக்கள் நலனுக்காகவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறேன்!
தமிழகம் அனைத்து அம்சங்களும் உள்ள மாநிலம், புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட உடனேயே தொழிற்சாலைகள் இங்கு வந்துவிடாது! – இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னதாக, முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாடு பயணத்தின் உண்மையான காரணங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் வெளிப்படையாக மேற்கொள்ளும் வெளிநாடு பயணத்திற்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தனது பயணம் பற்றி விளக்கவேண்டும். என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.