இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. தி.மு.க. இடையே நேரடி போட்டியும், நாங்குநேரியில், அ.தி.மு.க. காங்கிரஸ் இடையேயும், புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் இடையேயும் போட்டி நிலவுகிறது.
84.41 சதவீத வாக்குகள் பதிவான விக்கிரவாண்டி தொகுதியில், 188659 பேர் வாக்களித்துள்ளனர். 66.35 சதவீத வாக்குகள் பதிவான நாங்குநேரியில் 170622 பேர் வாக்களித்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை ஈ.எஸ். பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி டிவியும் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி, மொத்தமாக 14 மேசைகளில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இத்தொகுதிகளின் முடிவுகள் உள்ளாட்சி தேர்தலை உறுதி செய்யும் என்பதால் தேர்தல் முடிவை தி.மு.க. – அ.தி.மு.க.வினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பின் நடந்த வேலுார் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் நுாலிழையில் வெற்றி பெற்றது. எனவே இத்தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்து வரும் தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியும் என்பதால் தி.மு.க. பலத்த எதிர்பார்ப்புடன் உள்ளது.
இரு தொகுதிகளிலும் வெற்றி பெற அ.தி.மு.க. கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இதில் கிடைக்கும் வெற்றி உள்ளாட்சி தேர்தலில் உதவியாக இருக்கும் என்பதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் அ.தி.மு.க. தலைமை தேர்தல் முடிவை எதிர்நோக்கி உள்ளது. இந்த இரு தொகுதி வெற்றி – தோல்வி, இரு கூட்டணியின் எதிர்காலத்தை முடிவு செய்வதாகவும் அமையும்.