சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி வருகிறது. இதனிடையே, வெங்காய விவகாரத்தில் மத்திய அரசு வியாபாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
நாடு முழுவதும் வெங்காய விலை உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் 130 வரையிலும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 முதல் 180 வரையிலும் விற்கப்படுகிறது! வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெங்காய லாரிகளின் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாம்.
கடந்த ஆண்டு இதே நாளில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.45 ஆகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.160 ஆகவும் இருந்தது. தற்போது கோல்கத்தாவில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.150 ஆகவும், மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.11,000 ஆகவும் உள்ளது.
இதனிடையே, வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வியாபாரிகளின் கையிருப்பு அளவை பாதியாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வெங்காய விலை குறையாத நிலையில், நுகர்வோர் விவகாரத்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சில்லரை வியாபாரிகள் கையில் வைத்திருப்பதற்கான வெங்காய இருப்பு அளவு 10 டன்னில் இருந்து 5 டன்களாகவும், மொத்த விலை வெங்காய வியாபாரிகளின் கையிருப்பு அளவு 50 டன்களில் இருந்து 25 டன்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கையிருப்பு அளவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.