![கரடுமுரடான ஆடுகளத்தில் ஆடும் டெஸ்ட் மேட்ச் மாதிரி… கங்குலி சொன்ன உவமை! எதற்கு தெரியுமா?! 1 04 Sep 13 Saorav ganguliy](https://dhinasari.com/wp-content/uploads/2018/09/04_Sep-13_Saorav-ganguliy.jpg)
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, கரடு முரடான அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது மாதிரி உள்ளது என்று தன் கிரிக்கெட் துறையை ஒப்பிட்டு கொரோனா பாதிப்பு குறித்து விளக்கியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி !
கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் புரட்டிப் போட்டு வருகிறது. உலகின் மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவ்வளவு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா பாதிப்பு தெரியத் தொடங்கியதும், உலக நாடுகளின் பாதிப்புகளைப் பார்த்து விட்ட இந்திய அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இதிய மக்களைக் காப்பாற்ற உடனடி ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, இன்றுடன் 40 நாட்கள் நிறைவடையும் நிலையில், மக்களின் ஒத்துழைப்பு மேலும் தேவை என்று அரசு கருதுகிறது. இதனால் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப் பட்டிருக்கிறது.
தற்போது பெரு நகரங்களில் வேகமாகப் பரவி வருகிறது கொரோனா தொற்று. கொரோனாவின் சமூகப் பரவல் சங்கிலி பெரிதானால், மேலும் பலருக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால், மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
![கரடுமுரடான ஆடுகளத்தில் ஆடும் டெஸ்ட் மேட்ச் மாதிரி… கங்குலி சொன்ன உவமை! எதற்கு தெரியுமா?! 2 11 May 22 ganguly](https://dhinasari.com/wp-content/uploads/2018/05/11_May_22_ganguly.jpg)
இந்நிலையில் தற்போதுள்ள நிலை கரடு முரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சமம் என்று கொரோனா குறித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் சௌரவ் கங்குலி.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தற்போதுள்ள சூழ்நிலை அபாயகரமான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போல் உள்ளது. சீமிங் மற்றும் ஸ்பின்னிங் ஆகியவற்றிற்கு பந்து நன்றாக துணைபோகும். பேட்ஸ்மேன் சற்று தவறு செய்தாலும் அவ்வளவுதான். பேட்ஸ்மேன் ரன் அடிக்க வேண்டும். அதேநேரம் சிறு தவறு கூட செய்யாமல் கவனமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டியை வெல்ல முடியும். தற்போதுள்ள சூழ்நிலை மிகவும் கடினமானது. ஆயினும் ஒருங்கிணைந்து இதில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனக் கூறியுள்ளார்.
அவரவர் துறை சார்ந்து, அவரவருக்குத் தெரிந்த உவமையில் இப்போது கொரோனா குறித்த நாட்டின் சூழ்நிலையை விளக்க முயற்சி செய்து வருகிறார்கள் சிலர். எல்லாம் ஒரு விழிப்பு உணர்வுக்காகத்தான்!