![செங்கோட்டை பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு; கவுன்சிலர்கள் மனு! 1 manu to segottai municiality](https://dhinasari.com/wp-content/uploads/2024/06/manu-to-segottai-municiality--1024x576.jpg)
செங்கோட்டை முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிடக் கோரி அதிமுக., பாஜக., கவுன்சிலா்கள் மனு அளித்தனர்.
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க தடை கோரி அதிமுக, பாஜக கவுன்சிலா்கள் நகராட்சி மேலாளா் கண்ணனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
செங்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான முத்துசாமி பூங்காவிற்கு செங்கோட்டை தீர்மான எண் 200 நாள் 05.10.2023இன்படி நகராட்சி வருவாயினை அதிகப்படுத்தும் நோக்கில் முத்துசாமி பூங்காவிற்கு வரும் பொதுமக்களிடமிருந்து நுழைவுக் கட்டணத் தொகை வசூலிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் ஆட்சேபணை முரண்பாடுகள் இருந்தால் ஆணையாளா் செங்கோட்டை நகராட்சியில் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானமானது பெரும்பான்மையான உறுப்பினா்களால் ஆரம்ப கட்ட நிலைலேயே நிராகரிக்கப்பட்ட தீரமானம் ஆகும்.
அவ்வாறு நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தினை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என பொய்யாக நாளிதழில் செய்தி வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டத்திற்குரியது ஆகும். இதற்கு எங்களது கண்டனத்தினை மிக கடுமையாக தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் பூங்காவில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாயை விட அதிகமான அளவு வணிக வளாகங்களின் மூலம் பெறலாம். நகராட்சி வருவாயை பெருக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கும்பட்சத்தில் பொதுமக்களிடம் ரூ.5ஐ வசூலிப்பது பொதுமக்களை மேலும் சிரமத்திற்குள்ளாக்குவது போன்ற செயலாகும்.
மேலும் சொத்துவரி, உயர்வு மின்கட்டண உயர்வு போன்ற பல்வேறு கட்டண உயர்வுகளினால் பொதுமக்கள் அவதிபட்டு வரும் இந்நேரத்தில் பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது பொதுமக்கள் மற்றும் சிறுவா், சிறுமியா், மாணவ, மாணவியர், முதியோர் பெரும் சிரமத்திற்குள்ளாக்குவது போன்றது ஆகும்.
மேலும் மாணவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் பொதுமக்கள் என அனைவரும் சிலமணி நேரம் பூங்காவில் செலவிடுவார்கள் அதற்கும் நுழைவு கட்டணம் என்ற பெயரில் கட்டணம் வசூலிப்பது ஒரு கொடிய செயலாக கருதுகிறோம்.
ஏற்கெனவே தமிழக அரசு மக்களை பல்வேறு வரி உயர்வுகள் செய்து மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில் இந்நகராட்சியின் பூங்காவிற்கு வரும் மாணவர்கள், முதியோர்கள், குழந்தைகளையும் மிகுந்த இன்னல்களுக்கும் சிரமத்திற்குள்ளாக்க வேண்டாம் என பொதுமக்களின் நலன் கருதி மேற்படி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறைப்படுத்த வேண்டாம் என மிக கடுமையான ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் முத்துசாமி பூங்கா தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து நாளது தேதிவரையில் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் இலவச பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் திடீரென நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையினை உருவாக்கி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டாம் எனவே மேற்படி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க இருக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், நகர்மன்ற துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், சுப்பிரமணி, ஜெகன், முத்துப்பாண்டி, சரஸ்வதி, சுடர்ஒளி, பாஜக கவுன்சிலா்கள் வேம்புராஜ், செண்பகராஜன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவா் கணேசன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டனா்.