திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விளாம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அதனை அடுத்து அவர் மகன் ஜோதி முருகன் (32) தந்தையின் இறுதிச்சடங்கிற்கு தேவையான பொருட்கள் மற்றும் மாலை வாங்கி தனது நண்பரான முத்துச்செல்வம் என்பவரை அழைத்து கொண்டு மோட்டார் வண்டியில் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. அதில் ஜோதி முருகன் மற்றும் முத்துச்செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன்பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு ஜோதி முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முத்துச்செல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்த ஏற்பட்ட துயரம் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.