புது தில்லி:
2ஜி ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவித்து நீதிபதி ஓ.பி. சைனி இன்று தீர்ப்பளித்தார்.
2ஜி வழக்கை விசாரித்த புது தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, 105 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பினை இன்று வழங்கினார்.
அதில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்களை போதிய ஆதாரத்துடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று கூறி, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஆ. ராசா, கனிமொழி உட்பட 14 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.
மேலும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்துள்ள வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.638 கோடி சொத்துக்களை உடனடியாக விடுவிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் (கலைஞர்) தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி பணப்பரிமாற்றம் நடந்தது என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.
டி.பி. குழுமத்தின் முடக்கப்பட்ட ரூ.223.55 கோடி மதிப்புள்ள சொத்துக்களை விடுவிக்கவும், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட அனைத்து சொத்துக்களையும் விடுவிக்கவும், வழக்கு விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திருப்பியளிக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டுக்கான காலம் முடிவடைந்த பிறகு முடக்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் விடுவிக்கவும் அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.