ஈரோடு தனியார் மருத்துவமனையில் 620 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு, மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக 1.8 கிலோவாக உயர்ந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த திருமணமான தம்பதியினர், கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இன்றி இருந்து வந்தனர். அவர்கள் ஈரோடு சுதா மருத்துவமனையில் செயற்கை கருவுறுதல் மூலம், முதன்முறையாக கர்ப்பமாகினார்.
கர்ப்ப காலத்தில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததுடன், பனிக்குடநீர் மிக குறைவாக இருந்தது. இதனால், 25-வது வாரத்திலேயே அவசர அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், 620 கிராம் மட்டுமே இருந்தது.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், நுரையீரலில் ரத்தக்கசிவு மற்றும் குறைமாத தன்மையால் நுரையீரல் முதிர்ச்சியின்மை காரணமாக, 2 வாரத்திற்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்துடன் உடல் வளர்ச்சி சரியாக இல்லாததால், குழந்தைக்கு ஊசி மூலம், நரம்பு வழியாக தேவையான சத்துகள் கொடுக்கப்பட்டது. மேலும், 4 முறை ரத்தம் செலுத்தப்பட்டது.
இவ்வாறு தீவிர சிகிச்சை பிரிவில், குழந்தைக்கு 100 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், குறைமாதம் மற்றும் எடை குறைவாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் விழித்திரை பிரச்சனை மற்றும் மூளையில் ரத்தக்கசிவு போன்றவை குழந்தைக்கு இல்லை. சிகிச்சை முடிந்து குழந்தை டிஸ்சார்ஜ் ஆகும்போது, குழந்தையின் எடை 1.8 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது.
மிகவும் மோசமான நிலையில் இருந்த குழந்தைக்கு, சிறப்பான சிகிச்சை அளித்த பச்சிளம் குழந்தைகள் மருத்துவர்கள் எஸ்.ரங்கேஷ், என். கெளரிசங்கர் ஆகியோருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.