பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காசா பகுதியில் பிஎஸ்எப்
வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படையை(பிஎஸ்எப்) சேர்ந்த வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தார். அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டாரா அல்லது மற்ற வீரர்கள் பதிலடியில் உயிரிழந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அட்டாரி – வாகா எல்லையில் இருந்து சுமார் 13 கி.மீ., தொலைவில் காசா பகுதியில் பிஎஸ்எப் பின் 144வது பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இன்று சட்டீபா எஸ்கே என்ற வீரர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அதில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். மற்றொரு வீரர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சட்டிபாவும் குண்டடிபட்டு உயிரிழந்து கிடந்தார்.
அவர் தன்னை தானே சுட்டு கொண்டாரா அல்லது வீரர்கள் பதிலடியில் அவர் உயிரிழந்தாரா என விசாரணை நடந்து வருகிறது. மன உளைச்சல் காரணமாக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எதற்காக அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிஎஸ்எப் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.