அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வரும் 22-ம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, “அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 22-ம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
மேலும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில், இது புயலாக வலுப்பெறக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், தீவிர புயலாகவும், அதிதீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு சித்ராங் எனப் பெயரிடப்படும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இருக்காது எனவும் 5 நாட்களுக்கு மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளது” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.