![தைப்பூச விழா கோலாகலம்! பழநியில் குவிந்த பக்தர்கள்! 1 palani thaipusam](https://dhinasari.com/wp-content/uploads/2019/01/palani-thaipusam.jpg)
பழநி: தைப்பூச விழா இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, புகழ்பெற்ற முருகன் தலமான பழநிக்கு பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இதனால் பழனி நகரே நெரிசலில் திக்கித் திணறியது.
தைப்பூச விழா ஜன.,15ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச விழாவுக்காக வழக்கமான உற்ஸாகத்துடன் காவடி எடுத்து பக்தர்கள் பழநியில் குவிந்தனர். குறிப்பாக நடைபாதை பாதயாத்திரை மேற்கொண்டு, பழநி செல்லும் வழியில் பெருமளவில் பக்தர்கள் நடந்தே வந்தனர். குறிப்பாக, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும், ஆட்டம் பாட்டத்துடன் வந்து கொண்டிருந்தனர்.
![தைப்பூச விழா கோலாகலம்! பழநியில் குவிந்த பக்தர்கள்! 2 pathayathirai pazhani](https://dhinasari.com/wp-content/uploads/2019/01/pathayathirai-pazhani.jpg)
மதுரை கடந்து, காரைக்குடி நகரத்தார் காவடிகளுடன் வைரம், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட வைரவேலை பாரம்பரிய மரப்பெட்டியில் எடுத்து வைத்து மாட்டுவண்டியில் கொண்டு வந்தனர்.
பழநியில் குவிந்த பக்தர்களால் நகரில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, மலைக்கோயிலில் வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் நின்று சுமார் 7 மணி நேரம் வரை காத்திருந்து, பழநியாண்டவரை தரிசித்தனர் பக்தர்கள்.