திருப்புகழ் கதைகள் : பகுதி – 364
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்
அருணகிரிநாத சுவாமிகள் ஒருமுறை பல்லாயிரம் அடியார் குழாங்கள் சூழவும், “ஹரஹர“ என்ற முழக்கம் வானத்தை அளாவவும், கருப் புகாத கதிதனைக் காட்டும் திருப்புகழைப் பண்ணுடன் பாடிக்கொண்டும் திருத்தணிகை மலையை வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஆங்கிருந்த அறிவிலிகளும் அவநெறிபட்ட அசடர்களுமாகிய சிலர், சுவாமிகளது தவவேடத்தையும் திருநீற்றின் மாண்மையும் கண்டிகையின் கவினையும் பாடலின் பண்பையும் கண்டு, எள்ளி நகையாடி, திருப்புகழையும் அடியார்களையும் பழித்துப் பரிகசித்தனர்.
அதுகண்டு சுவாமிகள் சற்று மனம் வருந்தி, "என்னையனே, நின் திருப்புகழையும் திருப்புகழைப் பாடுஞ் சீலமிக்க அடியார்களையும் இவர்கள் நிந்தித்தது முறையா? வேலாயுதா, முருகா, இவர்களை அழிப்பதற்கு வேறு ஒரு நெருப்பு வேண்டுமோ! திருப்புகழே நெருப்பாய் நீறாக்கும்" என நினைந்து,
சினத்தவர் முடிக்கும், பகைத்தவர் குடிக்கும்,
செகுத்தவர் உயிர்க்கும், சினமாகச்
சிரிப்பவர் தமக்கும், பழிப்பவர் தமக்கும்,
திருப்புகழ் நெருப்பு, என்று அறிவோம்யாம்
என்று பாடியருளினார். அதனால் அப்புலவர்கள் அத்தனைப் பேர்களும் சாம்பல் குவியலானார்கள்.
அதனைக் கண்ட “கருணைக்கு அருணகிரி” என்று உலகம் பாராட்டுகின்ற, நம் பரம கருணாமூர்த்தியாகிய சுவாமிகள் திருவுளமிரங்கி, “அந்தோ, அறுமுகத்தரசே, இந்தக் குழந்தைகள் அறிவின்றிச் செய்த அபசாரத்திற்காக இப்பாடலைத் தொடங்கியவுடன் அழிந்தொழிந்தனரே. ஏ கருணாகரா, இவர்கள் செய்த அபராதத்தை மன்னித்து எழுந்தருளப் புரிவீர் என்று உருகியுரைத்து,
நினைத்ததும் அளிக்கும், மனத்தையும் உருக்கும்,
நிசிக்கரு அறுக்கும் பிறவாமல்,
நெருப்பையும் எரிக்கும், பொருப்பையும் இடிக்கும்,
நிறைப்புகழ் உரைக்கும் செயல்தாராய்
என்று பாடியருளவும் சாம்பல் குவியலான அத்தனைப் பேர்களும் துண் என்று உயிர் பெற்று எழுந்தனர்.
திருப்புகழ் அழிக்கவும் அருளவும் ஆற்றல் உடையது என்பதை உணர்ந்த அவர்கள் சுவாமிகள் திருவடித் தாமரைகளின் மீது வீ்ழ்ந்து பன்முறை வணங்கி “குருநாதா! அடியேங்கள் அறிவில்லாமல் பெரும் பாதகத்தைச் செய்துவிட்டோம்; எங்கள் தீமையைப் பொறுத்து எங்களை அடிமை கொண்டு ஆட்கொண்டருள்வீர்” என்று வேண்டி நின்றனர். சுவாமிகள் அவர்கட்கு அபயம் தந்து, அவர்களையும் தமது அடியார் திருக்கூட்டத்துள் சேர்த்துக் கொண்டு அவர்களைப் புனிதர்களாக்கி, ஆட்கொண்டருளினார்கள்.
பொதுவாக நமது சமூகத்தில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் எந்த இறைவனை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற கேள்வியோடு அலைவார்கள். எம்பெருமான் முருகப் பெருமான் ஒரு கருணை வள்ளல். உங்களுடைய வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி பின்வரும் திருப்புகழைப் பாராயணம் செய்தால் திருமணம் இனிதே நடைபேறும்.
நீலங்கொள் மேகத்தின் …… மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் …… டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் …… மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் …… தருள்வாயே
வேல்கொண்டு வேலைப்பண் …… டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் …… குலகாலா
நாலந்த வேதத்தின் …… பொருளோனே
நானென்று மார்தட்டும் …… பெருமாளே.
திருப்புகழ் பாயிரத்திலே ஒரு பாடல் வரிகளிலிருந்து கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலைப் புனைந்தார். அந்தப் பாடல்
எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர், சொல்
கல் எல்லாம் மாணிக்கக் கல்லாமோ? – பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ? கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்குஞ் செவி.
மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ?
ஆணிப்பொன் கையுறுவார்க்கு ஐயுறவு ஏன்? – பேணிப்பின்
செவ்வேல் விநோதன் திருப்புகழ் சிந்தித்து இருப்பார்க்கு
எவ்வேலை வேண்டும் இனி?
எனவே அன்பு ஆன்மீக நண்பர்களே, திருப்புகழைப் படியுங்கள். முருகனின் திருவருளால் இம்மையிலும் மறுமையிலும் நல்வாழ்வு பெறுங்கள்.