spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகிரேஸி மோகன் கடைசியாக எழுதிய வெண்பா!

கிரேஸி மோகன் கடைசியாக எழுதிய வெண்பா!

- Advertisement -

இனி, இரவு 11க்கு மேல், ‘ரமணா! தூங்கறியா” என்று கேட்டு ஒரு வெண்பாவைச் சொல்லி கைப்பேசியில் சத்சங்கம் செய்ய ஆளில்லை.

சு. ரவி தன்னுடைய மகத்தான சீடன் – நண்பனை இழந்துவிட்டான்.

பாலாஜியும், நாடகக் குழுவினரும் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறர்களோ!

சாந்தமே வடிவான திருமதி நளினி..?

வாழ்க்கை தொடரும். வலியைக் காலம் சரி செய்யும். வழிகள் மாறும்.

ஆனால், அவன் நம்மோடு இல்லை என்பது நெருடத்தான் செய்யும்.

ஆம், என் இனிய நண்பன் கிரேசி மோகன் மறைந்துவிட்டான். அதிலும் அவனுக்கு அவசரம்தான். கொஞ்சம் நெஞ்சுவலி ; கொஞ்சம் மூச்சுத் திணறல். எனினும், அவனே வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். தம்பி பாலாஜி உடைந்து போய்ப் பகிர்ந்துகோண்ட மோகனின் கடைசி வார்த்தைகள்:

“விவேகானந்தர், ரமணர், நம்ம பாரதியாரே போய்ட்டார். நாம என்னடா பெரிசா? நாமெல்லாம் போ வேண்டியவாதானே.”

அவனை உலகம் நகைச்சுவை எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக, நடிகராக, நாடகக் கலைஞராக அறியும். சிலருக்கு, அவனுடைய ஓவியக் கலைச் சிறப்பு தெரியும். நான் பல கூட்டங்களில் எடுத்துச் சொன்னாலும், அண்மையில்தான் அவனுடைய கவிதைத் திறமை ஊருக்குத் தெரிய வந்தது.

மோகனுக்கு, புனேயிலிருக்கும் எங்கள் இன்னொரு நண்பன் சு.ரவிதான் இலக்கிய குரு. ரவிதான் மோகனுக்கு யாப்பு கற்றுக் கொடுத்தான்.

எதிலும், முழுமையான ஈடுபாடு, தீவிரம் – இதுதான் மோகனின் உண்மை அடையாளம். வெற்றிலை, சீவல், புகையிலை போடுவதும் அப்படித்தான்; யாரோ சொன்னார்கள் என்று க்ரீன் டீ குடிக்க ஆரம்பித்து அதுவும் ஒரு நாளைக்கு முப்பது முறை என்றானது.

நம்பி ஈடுபடும் மனப்பாங்கும், அதை அப்படியே பற்றிக்கொள்ளும் தீவிரமும் அவன் கவிதையில் நுழையும்போது அவனைப் பின் தொடர்ந்து வந்தன.

மோகனுக்குக் கவிதை என்பது ஒரு தவ வெறி போல் ஆயிற்று. அவனே, ‘இதென்னடா விடவே முடியல!!!!!!!’ என்பான். அப்படி ஆரம்பித்த வெண்பாக்கள் அவனுடைய அன்றாட ஆராதனையாகின.

நேற்று காலை 10.40க்கு மின்னஞ்சலில் வந்து சேர்ந்த அவனுடைய கடைசி வெண்பாக்கள் இவை:

//மற்கடக்(குரங்குக்) குட்டியே, மாதா ரமணரை
நிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே -வர்கத்தின்
பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்
மோதுங்கள் அண்ணா மலை’’….!

வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்
சந்திர வம்சத்து சூரியன் -பந்தமறுப்பு:
முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்
கற்ற களவை மற….கிரேசி மோகன்…!//

என்னடா தளை தட்டுகிறதே என்றால், ‘தட்டிட்டுப் போட்டுமேடா! களைகட்டித்தானே இருக்கிறது,’ என்று சமாளிப்பான். வெண்பாக்களில் நகைச்சுவைக்காக ஆங்கிலச் சொற்களை அவன் கையாள்வதை நான் ஆதரிக்காததில் அவனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான். “ஏண்டா, காளமேகம் நகைச்சுவையா எழுதலையா?” என்பான். “அவர் இங்க்லீஷ்ல எங்கடா எழுதினார்?’ என்று நான் கேட்டால் ‘சரி சரி’ என்று சிரிப்பான்.

அவனுடைய நாடகத்தை நான் பார்த்ததே இல்லை என்பதில் அவனுக்குப் பெரும் வியப்பு. ஒரு முறை சாக்லேட் கிருஷ்ணா பார்த்தேன், என் மனைவியுடன். அதனுடைய 776 ஆவது நிகழ்ச்சியோ என்னமோ, அதன் பாராட்டுக் கூட்டத்தை மட்டும் பார்த்துவிட்டு வந்தேன்.

எங்கள் நட்புக்கும் அவனுடைய நாடக, திரைப்பட வெற்றிக்கும் ஏதும் தொடர்பில்லை. கவிதையையும் கடந்து, அவனுள்ளே மிக ஆழமான ஆன்மிக ஏக்கம் இருந்தது. அதை மிக உருக்கமாக அவன் என்னிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்வதுண்டு.

நான் ரமணர், நிசர்கதத்த மஹராஜ், ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவர்களைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறேன். சமீபத்தில் அவனுடைய “ரமணாயணம்” வெளியானதும் அவன் மறைவுக்கு ஒரு முகமன்தான் என்றால் அது மிகையில்லை.

“நான் எல்லாத்தையும் அனுபவிச்சுட்டேண்டா. சாக்லேட் கிருஷ்ணா மாதிரி பலமுறை மேடை கண்ட நாடகம் கிடையாது; கமலோடு, ரஜினியோடு வேலை பார்த்தேன். போறுண்டா!”

ஆண்டவன் சொல்றான் அண்ணாமலை முடிக்கறான் போன்ற புகழ்பெற்ற வசனங்கள் எப்படிப் பிறந்தன என்பதைச் சொல்வான்.

மற்றபடி என்னிடம் அவன் சினிமாக் கதை பேசியது குறைவு.

“இந்த நாடகம், சினிமா எல்லாத்தையும் விட்டுடணும் போல இருக்குடா,” என்பான். எதையும் விடவேண்டாம். எத்தனை பேர்களைக் கவலையை மறந்து சிரிக்க வைக்கிறாய்? எதை விட வேண்டுமோ அது தானே விடுபடும் என்பேன்.’சரி சரி’ என்பான்.

மகான்கள் அடைந்த, சொன்ன ஆன்மிக நிலையைத் தான் அடையவேண்டும் என்ற ஏக்கம் அண்மைக் காலத்தில் அவனுள் அக்கினியாக வளர்ந்தது. “எனக்கு அப்டிக் கெடெக்குமாடா? வீணாச் சாகக் கூடாதுடா” என்று தொலைபேசியில் அவன் நெகிழும்போதெல்லாம் நான் அவனிடம் அடித்துச் சொல்வேன், கட்டாயம் அந்த நற்கதியை அடைவாய் என்று.

அடைந்துவிட்டான் – அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் குருநாதர் சற்குரு சிவானந்த மூர்த்தி அவர்கள் மறைந்த அதே ஜூன் 10 ஆம் தேதி.

~ இசைக்கவி ரமணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe