ஆண்டவன் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்று அண்மையில் சொன்னார் ரஜினிகாந்த். அது ரசிகர்களுக்கு உத்ஸாகத்தை ஏற்படுத்தியது. ஆனால், அத ஒத்திப் போடுவது போல், எல்லாரும் வீட்டுக்குப் போங்க, அவங்க அவங்க வேலைய பாருங்க. போர் வரும் போது பார்த்துக்கலாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டு, தான் புதிதாக நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றுவிட்டார்.
எப்போதெல்லாம் அரசியல் பரபரப்பும், அரசியல் நெடியும் அதிகம் வீசுகிறதோ அப்போதெல்லாம் பஞ்ச் வசனங்களுடன் படத்தை எடுத்து வெளியிடுவது அவரது வழக்கமாகிப் போனது. இத்தகைய சூழலில், ரஜினியின் காலா படமும் அரசியல் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது.
இந்நிலையில், காலா படம் வெளியானதும் அல்லது படப்பிடிப்பு முடிந்ததும் அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்
இந்நிலையில் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் கூறியுள்ளார்.சென்னை அடையாரில் தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இப்போதுள்ள நிலைமையே நீடித்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும், அவர் இந்தியர் என்று பேசினார்.
இருப்பினும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பழைய கதைகளைச் சொல்லி பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
அவற்றில் ஒரு கருத்து….
1996ல் நடந்த சம்பவம் அது. ஜிகே + எம்கே=ஓகே என்று ஒரு கணக்கு போட்டு கருணாநிதி பேசியதையும். அப்போது, ரஜினி என்ன செய்தார், ஜெயலலிதாவுடனான வாய்க்கால் வரப்பு தகராறில் ரஜினி எடுத்த நிலை என்ன என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன் ஒருவரிடம். அப்போது, ரஜினி கருணாநிதிக்குக் கொடுத்த வாக்குறுதி, அதனை வெளிப்படையாக அவர் சொல்லிய விதம் எல்லாம்தான்…
அப்படி என்ன சொன்னார் ரஜினி?
(அமங்கலச் சொல் என்னிடம் இருந்து வராது; ஆனால் அவர் சொன்னது…) பெரியவர் இருக்குற வரை அரசியல் பக்கமே எட்டிப் பாக்க மாட்டேன் என்பதுதான்!
இப்போது வருடம் 20 கழிந்து விட்டது. அப்போதே 70க்கு மேல் வயதில் இருந்தார் கருணாநிதி.
சென்ற தேர்தலின் போது, (2016ல்) அழகிரி / ஸ்டாலின் பரபரப்பு பேச்செல்லாம் எழுந்தது. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற குரல் கட்சியில் ஒலித்தது. உபி.,யில் முலாயம், தன் மகனுக்குக் கொடுத்து ஒதுங்கியது போன்று கருணாநிதியும் ஒதுங்க வேண்டும் என்று பரவலாக பேச்சு வந்தபோது, கருணாநிதி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்… “எனக்கு இயற்கையாக ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வராவார்” என்றார்…
96ல் ரஜினி எதிர்வாய்ஸ் கொடுக்க காரணமான ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை … ஆனால் அவர் இருக்கும் வரை வரமாட்டேன் என்று ரஜினி வாக்குறுதி கொடுத்த கருணாநிதி இப்போதும் இருக்கிறார். அவர் ஒருவேளை அரசியலில் இருக்கும் வரை என்றுகூட இப்போது எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அப்படி ஒரு விளக்கத்தை ரஜினி கொடுப்பாரா என்பது எனக்குத் தெரியாது.
காலம் தப்பி விட்டது ரஜினிக்கு! அதற்குக் காரணமானது அவர் கொடுத்த சத்தியமாகக் கூட இருக்கலாம் அல்லது அப்படி ஒரு மாற்றம் வந்துவிடக் கூடாது என்று இருந்து விட்ட கருணாநிதியே கூட காரணமாக இருக்கலாம். தனக்கும் தன் மகனுக்கும் அடுத்தடுத்த ஆட்சி வாய்ப்புகள் வர வேண்டும் என்பதற்காகவே எம்ஜிஆர்., வைகோ, என்று கழற்றி விட்டவர்…
அப்படியே ரஜினி வந்தாலும், அவர் வரும் வரைதான் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
ரஜினி அரசியலுக்கு வந்தபின்னர்… அவரை ஒன்றுமில்லாமல், புஸ்ஸு என்று ஆக்கிவிட அனைத்து மீடியாக்களும் ரவுண்டு கட்டி அடிப்பார்கள். ஏனென்றால், இங்கே மீடியாக்கள் எல்லாம் கட்சிக்காரர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் எந்த ஒரு நிலையிலும் அரசியல் ரீதியாக தங்களைத் தவிர வேறு ஒரு சக்தி வளர்வதை விரும்ப மாட்டார்கள்… ஒருவரை தூக்கி விடுவது போல் போக்குக் காட்டி, சமாதி கட்டுவதற்கு வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டனுக்கு நேர்ந்த கதி தமிழகம் அறியும்….
இவ்வளவே…! இதை மீறி ரஜினி எப்டி ஜொலிக்கிறார்னு பாக்கலாம்!