துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த பார்சலில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத் துகள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திவரப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் துபாயில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் பெரிய பார்சல் ஒன்று வந்துள்ளது. பார்சலுக்கு வெளியே, இவை பூ மற்றும் காய்கறி செடிகளின் விதைகள் என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
வழக்கமான சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட பார்சல் மீது சந்தேகம் வரவே, அதை உடைத்து உள்ளே என்ன உள்ளது என பார்த்தபோது பார்சல் உள்ளே ஓட்ஸ் பாக்கெட்கள் மற்றும் குளிர்பானம் தயாரிக்கும் பவுடர்கள் அடங்கிய பாக்கெட்கள் இருந்தன.
இதனால் மேலும் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தபோது அதனுள் தங்கப்பொடி தூள்கள் கலந்திருப்பதை கண்டறிந்தனர். பின்னர் பவுடரை நீரில் கலந்து, தங்கப்பொடி தூள்களை தனியாக எடுத்து மதிப்பிட்டபோது, இரண்டரை கிலோ இருந்துள்ளது.
இதன் சர்வதேச மதிப்பு சுமார் 1 கோடியே 20 லட்சம் என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.