வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 13 வயது வெள்ளை புலி உயிரிழந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு 2000க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.
இங்கு பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு, நடவடிக்கைகளை தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கொரோனா உச்சத்தில் இருந்த நேரத்தில் வண்டலூர் பூங்காவில் விலங்குகள் தொற்றால் பாதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
இதன் காரணமாக விலங்குகளுக்கு ஏதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு தயார் நிலையில் இருந்து வந்தது.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் அட்டாக்ஸியா நோயால் பாதிக்கப்பட்ட 13 வயதான பெண் வெள்ளை புலிக்கு 2 வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
நோய் பாதிப்பால் புலிக்கு கால்கள் பலவீனம் அடைந்தது. கடந்த 2 நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்த வெள்ளை புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
வெள்ளை புலியை பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.