சென்னை: பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம், பிப்.19 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணத்தை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார். விடுப்பே எடுக்காத பிரதமர் என்று பெயர் வாங்கியுள்ள பிரதமர் மோடி, தற்போது தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஜன.27 ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார் மோடி.
பின்னர், பாஜக., பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். தொடர்ந்து கடந்த ஞாயிறு பிப்.10இல் திருப்பூர் வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தார். தொடர்ந்து வரும் 19ம் தேதி கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதாக இருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் குமரி பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார். வரும் 19ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 1ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார் என்றார்.
மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று வைகோ கூறியிருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று பாஜக.,வினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மோடியின் பயண மாறுதலை அடுத்து, கருப்பு காவிக்கொடிகளின் ஆர்ப்பாட்ட அரசியலும் நாள் மாற்றப்படக் கூடும்!