அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட இறைவன் அவதரிப்பான் / இறைவி அவதரிப்பாள் என்பது நம் பாரம்பரிய நம்பிக்கை.
அப்படி யாரேனும் அவதாரம் உருவாகி அதர்மம் அழிக்கப்பட்டுவிடாமல் தடுக்கவேண்டுமென்றால் போலி அவதாரம் (அரை அவதாரம்) ஒன்றை உருவாக்கு என்ற பாடத்தை அரக்கர்கள் கற்றுக்கொண்டுள்ளார்கள். நமக்கு வரவேண்டிய வரலாற்று நம்பிக்கை இது.நோய்க்கிருமிகள் ஒரு மருந்து தரப்பட்டதும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற்றுக்கொண்டு அடுத்த தலைமுறையில் கூடுதல் நோய்க்குணத்துடன் தாக்க வருவதுபோல் அதர்மவாதிகள் தம்மை பலப்படுத்திக்கொண்டு வந்து நிற்கிறார்கள்.
உலகின் இன்றைய அரக்கர்கள் நேற்றைய அரக்கர்களாக இருந்த அதே கிறிஸ்தவ ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளே.இஸ்லாமிய நாடுகளின் வளங்களைச் சுரண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளை வளர்த்துவிட்டார்கள் (தானாகவே பற்றி எரியும் குணம் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு மேலும் பெட்ரோல் வார்த்தனர்). அந்த நாடுகளில் ஜனநாயகத்தை மலரச் செய்யும் நோக்கிலும் அமைதியைக் கொண்டுவரும் நோக்கிலும் ராணுவத்தோடு சென்று கூடாரம் அமைத்து காவலர் பணியைச் செய்துவருகிறார்கள். அதற்கு உதவுவதற்கு இஸ்லாமிய தேசங்களிலேயே சில அரை இஸ்லாமியர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சீனாவில் கம்யூனிஸ முகமூடியைக் கழற்றாமலேயே சீனர்களைக் கொண்டே அதை பெருமுதலாளித்துவம் நோக்கித் திருப்பிவிட்டிருக்கிறார்கள். அப்படியாக அங்கும் அரை கம்யூனிஸ்ட்கள் சிலரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் பூர்வகுடிகளுக்குச் செய்த அராஜகங்கள் பக்கம் உலகின் கவனம் திரும்பாமல் இருக்கவேண்டுமென்று ரஷ்ய, ஜெர்மனி சர்வாதிகாரங்கள் பற்றியே இத்தனை ஆண்டுகாலமும் பேச வைத்துவந்திருக்கிறார்கள்.எல்லா நேரங்களிலும் அவர்களே திட்டமிட்டு எல்லாவற்றையும் ஆரம்பித்துவைப்பதில்லைதான். ஆனால், எந்த நாட்டில் எது உருவானாலும் அதைத் தமது நலன் சார்ந்து திருப்பிக் கொள்ளும் வலிமையும் எண்ணமும் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியாவிலும் அரை இந்தியர்களைக் கொண்டே இந்துப் பாரம்பரியத்தில் இருந்து விலகிச் செல்லும் வீழ்ச்சிப் பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து நடக்கவைத்துவருகிறார்கள்.
எப்போதெல்லாம் இந்து விரோத சக்திகளின் கொட்டம் தாங்க முடியாமல் போய் இந்துக்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வந்தார்களோ அப்போதெல்லாம் ஒரு அரை இந்துவை உருவாக்கி அந்த இந்து உணர்வை சர்வதேச கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் மழுங்கடித்திருக்கிறார்கள். அதன் பிறகு அந்த அரை இந்துவின் மூலம், நல்லதா கெட்டதா என்று தீர்மானிக்க முடியாத வகையில் இந்து விரோதச் செயல்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.
அந்த அரை இந்துவின் காலம் முடிந்ததும் அவருடைய வாரிசாக அதே நேரம் அவருக்கு எதிரான மனநிலை கொண்ட ஒருவரை வைத்து இந்து விரோதத்தை மேலும் தீவிரப்படுத்தி யிருக்கிறார்கள். இந்து விரோதச் செயல்கள் அரை இந்துவின் மூலம் செய்யப்படும்போது இந்து சக்திகளுக்கு அவரை அம்பலப்படுத்தி இந்துக்களை மீண்டும் ஒருங்கிணைப்பதென்பது மிகவும் சிரமமாக இருக்கும். இதுவே கிறிஸ்தவ சதித்திட்டத்தின் வெல்ல முடியாத அடிப்படை அம்சம்.
பிரிட்டிஷாரின் கொடுமைகள் தலைவிரித்தாடியபோது இதையேதான் செய்தார்கள். 1857-ல் சிப்பாய் புரட்சி வெடித்தபோது கிழக்கிந்திய கம்பெனியை ஓரங்கட்டிவிட்டு இந்தியர்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும்வகையில் மேதகு ராணியே ஆட்சிப் பொறுப்பை எடுத்துக்கொள்வதாகச் சொன்னார்கள்.
பிரிட்டிஷார் இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததிலிருந்தே பிரிட்டிஷ் கிறிஸ்தவ மையம் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய விஸ்தரிப்பு சக்திகளின் மறைமுக உத்தரவுகளின் பேரிலேயே அனைத்தும் நடந்தன. கிழக்கிந்திய கம்பெனி என்பது ஏதோ தனியான அமைப்பு என்ற தோற்றம்தான் உருவாக்கப் பட்டிருந்தது. அதோடு சுரண்டல், கொள்ளையடிப்பு, கலாச்சாரச்சீரழிவு போன்ற செயல்களை மேதகு ராணியார் நேரடியாகச் செய்யக் கூச்சப்பட்டதால் கிழக்கிந்தியக் கையாள்கள் மூலம் செய்தது.
இந்தியாவிலேயே போதிய அரை இந்துக்கள் உருவாக்கப் பட்டதும் மேதகு ராணியார் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கத் தீர்மானித்து ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் என்ற மேட்டுக்குடிக் குழு உருவாக்கப்பட்டு இந்திய சுதந்தர உணர்வு மெள்ள மட்டுப்படுத்தப்பட்டது.
திலகர், சாவர்க்கர், வ.உ.சி போன்ற வீர புருஷர்கள் தோன்றி இந்து தேசக் கனவை நனவாக்க முயன்றபோது காந்தி உருவாக்கப் பட்டார். தொடக்கம் முதலே அவர் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதச் சார்புடன் நடந்து கொண்டார். மாப்ளா கலகத்தில் இஸ்லாமியர் இந்துக்களைக் கொன்றதும் கற்பழித்ததும் அவர்களுடைய மதம் போதித்ததன் அடிப்படையில் செய்த செயல் மட்டுமே. அவர்கள் அளவில் அது சரியான செயல்தான் என்று பேசினார்.
அவருடைய அதீத அப்பீஸ்மெண்ட்கள், மிகை மனிதாபிமானங்கள் மூலம் இந்துத்துவர்களை வலுக் கட்டாயமாக ஓரத்துக்குத் தள்ளவைத்தார்கள் . காந்தியின் காலத்துக்குப் பின்னர் சுதந்தர தேசமானது இந்து சார்பு நிலை கொண்ட படேலிடமோ ஏன் இந்திய பாரம்பரியப் பெருமையில் நம்பிக்கை கொண்ட ஏதேனும் ஒரு காந்தியவாதியிடமோதான் காந்தியால் ஒப்படைக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அரை இந்து-அரை இந்தியரான நேரு, அம்பேத்கர் கையில் காந்தி ’தன் தேசத்தை’ ஒப்படைத்தார்.
நேருவை காந்தி தன் வாரிசாகக் கருதியது போன்ற அபத்த நகைச்சுவை இந்த உலகில் வேறு எதுவுமே இருக்க முடியாது. காந்தியின் சுதேசிப் பொருளாதாரம், கிராம நலன், கைவினைத் தொழில்கள், எந்திர-பெருந்தொழில் எதிர்ப்பு, எளிமை, தியாகம், புலனடக்கம், தெய்வ நம்பிக்கை என எந்த ஒன்றையுமே ஏற்காத நேரு, காந்தியின் அரசியல் வாரிசாகச் சொல்லப் பட்டதென்பது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநீதிதான்.
அப்படிப்பட்ட ஒருவரிடம் காந்தி ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்ததென்பது அவருமே அந்த விஷயங்களில் உண்மையான அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. சுதந்தரப் போராட்டத்துக்கு இணையாக கிராம ராஜ்ஜியம் என்ற கனவைத் தாங்கி வந்த காந்தி, இந்திய அரசியல் சாசன வரைவில் கிராமங்கள் படு மோசமாக ஓரங் கட்டப் பட்டதை மந்தகாசப் புன்னகையுடனே பார்த்து ரசித்தார்.
இந்தியாவின் இயல்பான வளர்ச்சியின் விதை (இந்து நீக்கத்தின் விதை) அதில் இருக்கிறது. காந்தி பிரிட்டிஷாரின் பிரதிநிதியாகச் செயல்பட்டார் என்று சொல்வது சற்று கடுமையான விமர்சனமாக இருக்கலாம். வேண்டுமானால், திலகர் தலைமையில் உருவான இந்து உணர்வை அரை இந்துவான காந்தியை உருவாக்கி, ஹைஜாக் செய்தது பிரிட்டிஷ் கிறிஸ்தவ மாஃபியா என்று சொல்லலாம்.
பிரிட்டிஷ் கிறிஸ்தவம் அரை இந்தியரிடம்தான் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்ற தன் சதித் திட்டத்துக்கு காந்தியைப் பயன்படுத்திக் கொண்டது என்று சொல்லலாம்.(அதன் சமகால சிறிய உதாரணம் அன்னா ஹஸாரே மூலம் உருவான லஞ்ச எதிர்ப்பு உணர்வை காங்கிரஸ் தலைவர் கெஜ்ரிவால் மூலம் ஹைஜாக் செய்த சம்பவத்தைச் சொல்லலாம்).
தமிழகத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து ராமர் சிலையை அவமதித்தல் என்பதாக அராஜகம் தலைவிரித்தாடத் தொடங்கியதும் இந்து உணர்வு உருத்திரள ஆரம்பித்தது. அப்போது அரை இந்துவான எம்.ஜி.ஆர். உருவாக்கப்பட்டார்.
எண்பதுகளில் வட மாநிலங்களில் இந்துத்துவம் வளர ஆரம்பித்த அதே நேரத்தில் தமிழகத்திலும் அந்த அணி திரளலே நடந்திருக்கவேண்டும். ஏனென்றால் நேருவிய காங்கிரஸ் எந்த அளவுக்கு இந்து விரோதியோ அதைவிடப் பல மடங்கு இந்து விரோதி திமுக. உண்மையில் வட இந்தியாவுக்கு முன்பாகவே இங்குதான் இந்து சக்திகள் அணி திரண்டிருக்க வேண்டும்.
ஒருவகையில் அது நடக்கத்தான் செய்தது. எம்.ஜி.ஆர். பின்னால் தமிழர்கள் அணி திரண்டதென்பது திராவிட இந்து விரோதத்துக்கான அணி திரளல்தான். ஆனால், எம்.ஜி.ஆரும் ஓர் அரை இந்துவாக நட்டு வளர்க்கப்பட்ட மரமே. மர்மமான முறையில் எம்.ஜி.ஆர் மறைந்ததைத் தொடர்ந்து அவருடைய வாரிசு என்று சொல்லப்பட்ட ஜெயலலிதா அரியணை ஏற்றப்பட்டார். மக்களிடையே எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கைத் தன் பக்கம் திருப்ப எந்த அளவுக்கு எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மேலே ஒரு சொட்டு மரியாதையோ, பாசமோ ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மேல் கிடையாது.
திரைப்படங்களில் ஜோடியாக நடித்ததைப் பார்த்து எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதா தான் என்று தமிழ் சமூகம் வெள்ளந்தியாக நம்பியது. இத்தனைக்கும் எம்.ஜி.ஆருடன் தாலி கட்டிக் குடும்பம் நடத்திய ஜானகியைக் கூட அவருடைய வாரிசாக ஏற்றிருக்க வில்லை. இது மக்கள் தாமாகச் செய்ததுதான். கிறிஸ்தவ சதி இதில் எதுவும் இல்லை.
ஆனால், தமிழகத்திலும் உருவாகியிருக்க வேண்டிய இந்து அணி திரளலை எம்.ஜி.ஆர். மூலம் மட்டுப்படுத்த முயன்ற சக்திகள் ஜெயலலிதாவை பல வீடியோ கேஸட்களைக் கைவசம் வைத்திருந்த கேசட் கடை ஓனர் மூலம் வழிக்குக் கொண்டு வந்தனர். அதைப் பொதுவெளியில் பயன்படுத்துவது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுக்கும் விஷயமாகிவிடும் என்பதால், பொருளாதாரக் குற்றங்கள், ரியல் எஸ்டேட் ரெளடியிஸம், பிற வகை அராஜகம் எனச் செய்ய வைத்து சட்ட ரீதியான பிளாக் மெயில்களுக்கு உட்படுத்திக் கொண்டனர்.
அதன் பின்னர், ஆசாரியார் கைது தொடங்கி இஸ்லாமியத் தீவிரவாதம், போலித் தமிழ் தேசியவாதம் ஆகியவற்றுக்குத் தமிழகத்தில் களம் அமைத்துத் தருவது வரையிலான இந்து விரோதச் செயல்களைச் செய்வித்தனர்.
எம்.ஜி.ஆரைப் போலவே ஜெயலலிதாவும் மரணிக்கப்பட தமிழகத்தில் ‘வெற்றிடம்’ உருவானது. அந்த வெற்றிடத்தில் இந்து விரோத, இந்திய விரோத அதர்மச் செயல்கள் தலை தூக்கத் தொடங்கியுள்ளன.
இது அவதாரம் உருவாக வேண்டிய நேரம் மட்டுமல்ல; இன்னொரு அரை இந்து உருவாகாமல் தடுக்கப்பட வேண்டிய நேரமும்கூட.!
- பி.ஆர்.மகாதேவன்