கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், தன் அரசியல் கண்ணோட்டம் குறித்தும் நேற்று (மார்ச் 12) சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் பேசினார்.
தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்வதற்கு தான் 3 முக்கிய திட்டங்கள் வைத்துள்ளதாகக் கூறினார். கட்சியில் குறைவான பதவிகள், 50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கு வாய்ப்பு, கட்சித் தலைமை வேறு, ஆட்சித் தலைமை வேறு ஆகிய 3 திட்டங்களை வைத்திருப்பதாக ரஜினி கூறினார். தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் எனவும் ரஜினி கூறினார்.
நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக நன்மைக்காக சாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்.
“ரஜினி அரசியலுக்கு வருகிறாரா என்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அவருக்கும் தெரியாது. அவர் வரும்போது பார்த்துக்கொள்வோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, தான் முதல்வராகலாம் என நினைத்துள்ளதாகவும், 2021-ல் நான் தான் தமிழக முதல்வர் என்றும் நகைச்சுவையுடன் கூறினார்.