ஆட்கடத்தல் பேர்வழி என்று செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலினே கூறிவிட்டு இன்று அதே ஸ்டாலின் அவருக்காக வாக்குகள் கேட்டு வருகின்றார்; தற்போது கூட அந்த வழக்கு குறித்து செய்தித்தாளில் படித்தேன்! அதுவும் தி.மு.க பத்திரிக்கையான முரசொலியில்தான் என்றும் கூறி, அந்தப் பத்திரிகை நகல்களை பொதுமக்களிடம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது வெஞ்சமாங்கூடலூர், இனங்கூர், ஆண்டிப்பட்டிக்கோட்டை, குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது. அவர் பேசியது…
நடைபெறுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தல் யாரால் வந்தது என்பது, பொதுமக்கள் எல்லோருக்கும் தெரியும், அதே துரோகி தான், தி.மு.க கட்சிக்கு சென்று தற்போது வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
முதன்முதலில் ம.தி.மு.க வில் இருந்து, பின்னர் தி.மு.க.வில் கவுன்சிலராகி, பின்னர் அதிமுக ஆட்சியில் எம்.எல்.ஏ ஆனதோடு, அமைச்சராகி, பின்னர் அங்கிருந்து அமமுக சென்று தற்போது தி.மு.க வில் ஐக்கியமாக்கியுள்ளார்.
5 ஆண்டுகளுக்குள் 3 கட்சிக்கு மாறியவர் தான் இந்த செந்தில் பாலாஜி, கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு கட்சிகளில் நின்ற ஒரே வேட்பாளர் இந்த செந்தில் பாலாஜி தான். கட்சிக்கே துரோகம் செய்தவர் தான் இந்த செந்தில் பாலாஜி! பொதுமக்களுக்கு துரோகம் செய்வார்,
அவரை இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டியது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான், ஆனால் அந்த கட்சிக்கே துரோகம் செய்தவர் செந்தில் பாலாஜி! ஆனால் கடந்த முறை இதே அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற போது, செந்தில் பாலாஜி நன்றி சொல்லக்கூட விரும்பவில்லை, ஆனால், எங்களது அ.தி.மு.க வேட்பாளர் 2011 ம் ஆண்டில் இதே அரவக்குறிச்சி தொகுதியில் இதே செந்தில் பாலாஜியினால் மறைமுகமாக தோற்கடிக்கப்பட்டார். தோல்வியுற்றாலும் நன்றி சொல்ல வந்தவர் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் நாதன்
இங்கே எதிர்த்து நிற்கும், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி நல்லவர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அதே மு.க.ஸ்டாலின், கடந்த 2011 ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் போக்குவரத்து துறையில் மோசடி என்று கூறி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயற்சித்து, பின்னர் வெளிநடப்பு செய்தார்.
அதே மு.க.ஸ்டாலின், சட்டசபையில் இருந்து வெளிவந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, இதே செந்தில் பாலாஜி, ஆள்கடத்தல் பேர்வழி செந்தில் பாலாஜிக்கு எனது தகுதி பற்றி பேச தகுதியில்லை என்று கூறியதை அவரது கட்சி பத்திரிக்கையே (முரசொலி) சுட்டிக்காட்டியுள்ளது.
இதோ பாருங்கள்… என்று கூறிய எடப்பாடி பழனிசாமி… அந்த நாளிதழின் நகலை மக்களிடமும் பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்தார்.
பின்னர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே ஆட்கடத்தல் வழக்கினைத்தான் நான் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் படித்தேன்! ஆகவே ஆட்கடத்தல் செந்தில் பாலாஜியை பார்த்துதான் வாக்குகள் அளிக்க வேண்டும்! அன்று பேசிய நாக்கு இன்று பேச மறுக்கின்றது. ஏனென்றால் ஆட்களைக் கடத்தி விடுவார்கள்! ஆகவே, அப்படிபட்ட ஆள்தான் தி.மு.க வேட்பாளர்!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போலத் தான் அந்தக் கட்சி வேட்பாளர் எப்படியோ, அப்படித் தான் அந்தக் கட்சியும்!
மக்களுக்காக பல நல்லதிட்டங்களை தீட்டி வரும் நிலையில், இந்தத் திட்டங்களை நிறுத்துவது என்றால் இந்திய அளவில் ஒரே தலைவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான்! இங்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகின்றார்… 25 ஆயிரம் குடும்பங்களுக்கு 3 செண்ட் நிலம் கொடுப்பதாக! அப்படிப் பார்த்தால், எங்கு நிலம் இருக்கின்றது? 1100 ஏக்கர் தேவை, பொது இடம், பாதை போடுதல் உள்ளிட்டவைகள் எல்லாம் சேர்ந்து தேவைப்படுகின்றது.
இந்நிலையில் எங்கே அந்த நிலத்திற்கு செல்வது? ஏற்கனவே தி.மு.க வின் மறைந்த தலைவர் கருணாநிதி இருக்கும் போது 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக கூறி பொதுமக்களை ஏமாற்றினார். சுடுகாட்டுக்குக் கூட நிலம் கொடுக்கவில்லை!
ஆனால், சொந்தமாக அவர் (செந்தில் பாலாஜி) கொடுப்பாராம்,. அப்போது, 1100 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு ஏது பணம்?
இதே செந்தில் பாலாஜி, முதன்முறையாக போட்டியிடும் போது வேட்புமனு தாக்கலில் சொத்து மதிப்பு எவ்வளவு, இப்போது எவ்வளவு? ஆக எப்படி வந்தது இந்தப் பணம்?
எப்போதும் பொய்யைச் சொல்வது தான் தி.மு.க! ஆனால் ஆளுகின்ற அ.தி.மு.க அரசு வீட்டு மனைப் பட்டாக்கள் இல்லாதவர்களுக்கு நிலமும், அதில் வீடு கட்டியும் தந்திருக்கிறது, தந்து வருகிறது என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.