கடந்த மூன்று நாட்களில் விகடன்.காம் இணையதளத்தில் வந்த செய்திகள் இவை. இந்தச் செய்திகள் எதிலும் “இது யார் சொன்ன செய்தி” என்பதற்கான விவரம் இல்லவே இல்லை!
1. `பா.ஜ.க அல்லாத பிரமாண்ட அணி!’ – எடப்பாடி விருப்பத்துக்குத் தடை போட்ட பன்னீர்` (08.02.2019)
2. உங்களுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்!’ – ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் மெசேஜ் (07.02.2019)
3. `எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி?’ – 7 இடங்களை உறுதி செய்த ஸ்டாலின் (07.02.2019)
4. `ஜெயிக்கப் போவது துரைமுருகனா…ஆ.ராசாவா?’ – ராமதாஸுக்காக அறிவாலயத்தில் மோதல் (07.02.2019)
5. `பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் எப்படியிருக்கும்?’ – எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வே(06.02.2019)
– இப்படி தினமும் நான்கைந்து கட்டுக்கதைகளை விகடன் இணையத்தில் எழுதி வருகிறார்கள். இதில் எழுதிவரும் ஆ.விஜயானந்த் என்பவர் “கிசுகிசு நிருபர் தான்” என்று விகடன் அறிவிக்க வேண்டும். அதுவே அந்த ஊடகம் செய்யக்கூடிய குறைந்தபட்ச ஊடகவியல் நேர்மையாக இருக்கும்!
அரசியல் செய்திகளை ஊடகங்கள் இருவகையாக வெளியிடுகின்றன.
1. பிரபலங்கள், தலைவர்களிடம் கருத்து கேட்டும், அவர்களின் அறிக்கைகளை வைத்தும் செய்தி வெளியிடுவது ஒருவகை.
2. ஜூவியின் ‘கழுகார்’, நக்கீரனின் ‘ராங்க் கால்’ போன்று ஆதரமற்ற ரகசியங்களை செய்தி வெளியிடுவது இன்னொரு வகை!
– மேற்கண்டவாறு, அதிகாரப்பூர்வ செய்தி அல்லது அதிகாரப்பூர்வமற்ற ரகசியங்கள் எனும் இரண்டு வகையிலும் குறைந்தபட்ச தெளிவும், நேர்மையும் இருக்கிறது. அதாவது, ‘கழுகார்’, ‘ராங்க் கால்’ ரகசியங்கள் என்பவை உத்தேசமானவை என்றும், அதனை நம்புவது கடினம் என்றும் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், மேற்கண்ட எந்த வகையிலும் சேராமல் ‘அதிகாரப்பூர்வமான செய்தி’ என்கிற போர்வையில் ‘உத்தேசமான கட்டுக்கதைகளை’ எழுதுவதை சில ஊடகங்கள் திட்டமிட்டு செய்துவருகின்றன. அதில் முதலிடத்தில் இருப்பது ஆனந்த விகடன் இணையமும், தினமலர் நாளிதழும் ஆகும்.
படிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், சராசரி செய்திகள் போலவே தோன்றும் கட்டுக்கதைகளை எழுதி பரப்பும் வேலையை சென்னையில் சிலர் கூட்டாக செய்து வருகின்றனர். இவர்களின் கட்டுக்கதைகளை பரப்பும் வேலையை செய்வதில் முதலிடத்தில் இருப்பது விகடன் விஜயானந்த். அடுத்து, இதே கதையை தினமலர் நாளிதழில் ‘நமது நிருபர்’ என்கிற பெயரில் எழுதும் ‘வி’ஷமி ஒருவர் இருக்கிறார்.
இவர்களைப் போல சென்னையில் உள்ள பெரும்பாலான ஊடகங்களிலும் ஒரு சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் “ஒரே குழுவாக” இயங்குகிறார்கள். அதாவது, எந்த ஊடகத்தில் எந்த கட்டுக்கதை வரவேண்டும் என்பதுடன், இந்தக் கட்டுகதைகள் எல்லாமும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதையும் இவர்கள் ஒன்றிணைந்து முடிவு செய்கிறார்கள்.
படிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், சராசரி செய்திகள் போலவே தோன்றும் கட்டுக்கதைகளை எழுதி விகடன் தளத்தில் தினமும் திட்டமிட்டு பரப்புகிறார்கள். இந்த செய்திகள் எதற்குமே மூலம் இருக்காது. ஆதாரமும் இருக்காது.
எடப்பாடி, ஓபிஎஸ், ஸ்டாலின், துரைமுருகன் என எல்லோரது பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் சொன்னது போலவே தினமும் செய்திகளை எழுதுகிறார்கள். ஆனால், ஒரே ஒரு செய்தியில் கூட அந்த செய்தியை சொன்னது யார் என்கிற விவரம் இருக்காது. எல்லாவற்றிலும் ‘அந்தக் கட்சியின் ஒரு மூத்த நிர்வாகி கூறினார்” என்று மட்டுமே இருக்கும். ஒரே ஒரு செய்தியில் கூட, அந்த மூத்த நிர்வாகி யார் என்பது இருக்கவே இருக்காது.
பொதுவாக எல்லா பத்திரிகைகளிலும், நான்கைந்து பேரிடம் கருத்துக் கேட்கும் போது – அதில் ஏதேனும் ஒருவர் பெயரை குறிப்பிட விரும்பவில்லை எனறு சில நேரங்களில் எழுதுவார்கள். ஆனால், எல்லா நாட்களிலும் எல்லா கட்டுரைகளிலும் ‘ஒரு தலைவர்’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள். செய்தியை சொன்னது யார் என்று ஒரு நாளும் பெயரை குறிப்பிட்டு எழுதுவதே இல்லை.
இவர்களின் நோக்கம் என்ன?
இத்தகைய அரசியல் கட்டுக்கதைகளை உருவாக்கி பல ஊடகங்களிலும் ஒரே மாதிரியாக பரப்பும் இந்தக் குழுவினர் – ஒரே குழுவினர் ! இந்த ஒரே ‘குழு’ என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. இவர்களின் நோக்கம், “தமிழ்நாட்டின் அரசியல் சூழல் எவ்வாறு அமைய வேண்டும், எவ்வாறு அமையக் கூடாது” என்பதை வழிநடத்துவது.
அதாவது – “தமிழக மக்களில் எந்தக் குழுவினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். எந்தக் குழுவினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது” – என்பதை இவர்கள் முடிவு செய்ய விரும்புகிறார்கள். இவர்களின் எதிரி தனிநபர்கள் அல்ல. மாறாக ஒரு சில சமுதாயங்கள்!
இந்த மோசமான நோக்கம் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு விகடன் பலியாவது வெட்கக் கேடு.
– அருள் ரத்தினம்