![கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன் - ஓர் இனிய அனுபவம்! 1 krishnammal jagannadhan](https://dhinasari.com/wp-content/uploads/2020/01/krishnammal-jagannadhan-1024x768.jpg)
இந்திய அரசு இந்த வருடம் அறிவித்துள்ள பத்மபூஷன் விருதுகளில், தமிழ் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளதை படித்தவுடன் பெருமகிழ்ச்சியடைந்தேன்.
பதினொரு வருடங்களுக்கு முன்னால் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் வர்தாவில் இருக்கும் மகாத்மா காந்தி இன்ஸ்டியூட் ஆப் ரூரல் இண்டஸ்ட்ரியலிசேஷன் ( (Mahatma Gandhi Institute of Rural Industrialisation (MGIRI) -யில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்து இருந்தார்.
அப்பொழுது, நிருபர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நான் முதன்முறையாக ஒரு பத்திரிக்கையாளராக அந்த கூட்டத்தில் பங்கேற்றேன். முதலில் அவரிடம் அறிமுகம் செய்து கொண்டேன். பத்திரிக்கையாளருடன் இந்தியிலும், ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றினார்.
கிருஷ்ணம்மாள் ஜெகன்னாரதன் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஆசார்ய வினோபா பாவேவுடன் 14 ஆண்டுகள் பூதான் இயக்கத்தில் அவருடன் பணியாற்றியதையும், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மக்களுக்கு பூதான் இயக்கம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கியதை நினைவுப் படுத்தினார்.
வினோபா பாவைப் பற்றி கூறும்போது, அவர் ஒரு ‘சமுதாயப் புரட்சியாளாராக இருந்தார்’ என்றும், ஏழை மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர் என்றும் கூறினார். இன்றைய நாட்களில் பாரதத்தில் ‘ ஸ்வராஜ்யம்’ என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்தில் இறால் மீன் வளர்ப்பு மையம் அமைய இருந்ததை எதிர்த்து போரிட்டதை குறிப்பிட்டார். விளை நிலங்களில் கடல் தண்ணீரை நிரப்பி, இறால் மீன்களை வளர்க்க இருந்ததை எதிர்த்ததாக கூறினார். அதற்காக சிறை சென்றதையும் குறிப்பிட்டார்.
இறுதியில், உச்ச நீதிமன்றம் விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பளித்தையும் குறிப்பிட்டார். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை அதன் நிலப்பரப்பிற்காகவும், குறைவான சம்பளத்தில் வேலையாட்கள் கிடைப்பதற்காகவும் அனுகுகின்றனர் என்றார். விளை நிலங்களில் தொழிற்சாலைகளாக்கி விட்டு, மனிதர்கள் மரத்தையும், காகிதத்தையும் சாப்பிட முடியுமா? என்றும் வினவினார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முடிந்தவுடன் அவருடன் மதிய உணவு சாப்பிடவும் வாய்ப்பு கிடைத்தது. அன்றே, அவர் சென்னை கிளம்பி சென்றார். இரயிலில் இரண்டாம் வகுப்பிலேயே பயணமும் செய்தார்.
அவரின் எளிமை, அனுபவம், தன்னம்பிக்கை, போராடும் குணம், உதவும் குணம் – என பலவற்றை அறிய முடிந்தது, அவரிடம் இருந்து கற்க முடிந்தது.
- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்