தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள தனியார் கலைக்கல்லூரியில் செயல்பட்டுவருகிறது கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம். முழுக்க முழுக்க சித்த மருந்துகளை மட்டுமே கொடுக்கக்கூடிய இந்த சிகிச்சை மையத்தில், தற்போது 100 பேர் சிகிச்சை எடுத்துவருகின்றனர். தாளிசாதி சூரணம், கபசுரக் குடிநீர் போன்ற சித்த மருந்துகள் மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும், நம் பாரம்பர்ய உணவுகளையும் கொடுத்து அசத்தி வருகின்றனர்.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் இது பற்றி கூறியது, “சித்த மருந்துகள் கொடுப்பதால், உடலில் நல்ல முன்னேற்றம் காண முடிகிறது. மருந்துகள் ஒருபுறம் என்றால், அவர்களுக்கு சத்தான உணவுப் பொருள்கள் கொடுப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் விதவிதமான நம் பாரம்பர்ய உணவுகளைக் கொடுத்து வருகிறோம். காலை 7 மணிக்கு மூலிகை டீ அல்லது காபி கொடுக்கப்படும்.
இதில், கொத்தமல்லி, அதிமதுரம், துளசி, கருப்பட்டி, இஞ்சி, லெமன் ஆகியவை இருக்கும். 8 மணிக்கு காலை டிபன். இதில், ஒரு நாள், மாப்பிள்ளை சம்பா இட்லி, ஒரு நாள் திணை பொங்கல், நிலக்கடலை சட்னி, இன்னொரு நாள் சாமை பொங்கல் ஆகியவை கொடுக்கிறோம்.
காலை 11 மணிக்கு லெமன் ஜூஸ் அல்லது நெல்லிக்காய் ஜூஸ் கொடுக்கிறோம்.
1 மணிக்கு மதிய உணவு. இதில், எள்ளு சாதம், கருவேப்பிலை சாதம், பருப்பு சாதம், உளுந்து சாதம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாதம் இடம்பெறும். கூடவே, ஒவ்வொரு வகையான கீரைக் கூட்டு இருக்கும். அதனோடு, ஐயங்காய பொடி கலந்த மோர், சீரக தண்ணீர் கொடுக்கிறோம்.
மாலை 4 மணிக்கு சூப் கொடுக்கப்படும். தட்டாம்பயறு சூப், கொள்ளு சூப் கொடுத்து, அதனோடு கறுப்பு கவுணி புட்டு, கேழ்வரகு புட்டு எனத் தினம் தினம் ஒவ்வொரு வகையான புட்டு கொடுக்கிறோம்.
இரவு 7 மணிக்கு முருங்கை தோசை, புதினா ஊத்தாப்பம், சிவப்பு அவல் உப்புமா, லட்சகெட்ட கீரை தோசை, கேரட் தோசை, கருவேப்பிலை பொடி தோசை எனக் கொடுக்கிறோம்.
இரவு தூங்கும் முன்னர், 9 மணிக்கு மிளகுப்பால் அல்லது பூண்டு பால் அவசியம் குடித்துவிட்டுதான் உறங்கச் செல்ல வேண்டும். இப்படி, தினம் தினம் விதவிதமாக நம் பாரம்பர்ய உணவுகளைக் கொடுத்துவருவதால், தேனி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்” என்றார்.