மதுக்கடை திறப்பு, லாட்டரி விற்பனை வேண்டும் என்று குரல் கொடுக்கும் ப. சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், திருநாவுக்கரசர் போன்றோர் நாளை வருமானத்திற்காக ‘அந்த’ தொழிலையும் அங்கீகரிக்க வேண்டும் என்று சொல்வார்கள் போலும்! “படிப்பகம்” திறந்த பெருந்தலைவர் காமராஜர் பெயரை உச்சரித்து, “குடிப்பகம்” திறக்க குரல் கொடுக்த்து அவரை அவமானப் படுத்த வேண்டாம் என்று, இந்து தமிழர் கட்சி தலைவர் ராம.ரவிக்குமார் காங்கிரஸாருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
“போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது” என்பதற்காக அரசு விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்து இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடியுங்கள் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார்.
சட்டவிரோதமாக போலி மது,கள்ள மது வருகிறது என்றால் தமிழக அரசு தன்னுடைய கடமையை செய்ய தவறி இருக்கிறது என்று தானே அர்த்தம்.
நீண்ட நெடுந்தூர வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கும்
மதுபிரியர்கள். தாங்கள் தள்ளாடிக் கொண்டு இருந்தால்அரசு நிலையாக நடைபெறும் என்று தத்துவம் பேசும் தியாக சீலர்களை கௌரவிக்கலாம்.
டீக்கடைகளில் டீ குடிப்பவர்கள் கூட்டமாக இருக்கிறார்கள். நோய் பரவல் வந்துவிடும். மதுக்கடைகளில் அப்படி கிடையாது உடனடியாக சென்று விடுகிறார்கள் என்று காங்கிரஸ் திருச்சி எம்பிதிருநாவுக்கரசர் டாஸ்மாக் கடை திறக்க ஆதரவு தெரிவிக்கிறார்.
மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் பூரணமதுவிலக்கு வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
ஆனால் அது தற்போது முடியாது .ஆண்கள் பெண்கள் என அனைவரும் குடிக்க பழகி விட்டார்கள்.
மது அருந்துபவர்களை “தீயவர்கள் “என சொல்லக்கூடாது. “மது அருந்துதல் நாட்டுக்கு கேடு வீட்டுக்கு கேடு” என்று பிரச்சாரத்தை தான் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமே ஒழிய; மதுக் கடைகளை மூடுவது என்பது முறையல்ல. கள்ளச் சாராயம் ஆறாக ஓடுவதை தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
கள்ளச்சாராயம் விற்பனை ஆகாது என்று பத்திரிக்கையாளர்கள் உத்தரவாதம் கொடுங்கள் கடைகளை டாஸ்மாக் கடைகளை மூட சொல்கிறோம் என்று கேட்கிறார்.
இவருக்கு ஒரு படி மேலே போய் இவருடைய புதல்வர் கார்த்திக் சிதம்பரம் எம்பி அவர்கள்”லாட்டரி சீட்டு மறைமுகமாக விற்கப் பட்டு வருகிறது. அதை அரசே விற்றால் கோடி கோடியாக பணம் கொட்டும் . அதில் கிடைக்கும் வருமானத்தை ஏழை எளிய மாணவர்களின் மேல்படிப்புக்கு தரமான மருத்துவ உதவிக்கு பயன்படுத்தலாம். அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள், ஏன் நான் கூட குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கவில்லை. அதேபோல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் இல்லை .
லாட்டரி சீட்டு வருமானம் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கலாம் . அரசே விற்பனை செய்யலாம் என யோசனை கூறியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. விமர்சனம்தான் நல்ல விடிவுக்கு அடித்தளம் என்று கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், திருநாவுக்கரசர்
போன்றவர்கள் மதுக் கடைகளை திறக்க வேண்டும் ;லாட்டரி விற்பனையை தொடங்க வேண்டும் என்று ஆதரவு குரல் கொடுப்பது வேதனை அளிக்கிறது.
பெருந்தலைவர் காமராஜர் ஏழைப் பிள்ளைகள் கல்வி பெற வேண்டுமென்று “படிப்பகங்கள்” திறந்தார். தமிழக மக்கள் வாழ்வு செழிக்க ஊழலற்ற நேர்மையான நல்லாட்சி நாயகராக வாழ்ந்து மறைந்தும்வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வர காரணமான லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் தமிழகத்தில் தொடங்குவதற்கு லாட்டரி அதிபர்களின் குரலாக கார்த்திக் சிதம்பரம் பேசுகிறார் என்றே தோன்றுகிறது. இதுபோன்ற கருத்துக்களை சொல்ல துணிந்தவர்கள் நாளை வருமானத்திற்காக வெளி நாட்டில் இருப்பது போல ’அந்த’ தொழிலையும் அரசு அங்கீகரித்து நடத்திட வேண்டும் என்று யோசனை கூறினாலும் ஆச்சரியப்படுவதற்குய் இல்லை.
மக்களின் பணத்தை மக்களிடமிருந்து மது, லாட்டரி மூலமாக பறித்து மக்களுக்கு இலவசம், நலத்திட்டங்கள் என்று கொடுப்பது மக்கள் நலன் சார்ந்த அரசின் செயலாக தெரியவில்லை. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மது விற்பனையை தடுக்காமல் இருந்தது போல, தற்போது ஆளும் பாஜக கூட்டணி அரசு மது விற்பனையை அனுமதித்திருக்கிறது. இதுவும் கண்டனத்துக்கு உரியது.
தமிழகத்தில் பனைமரம் தென்னை மரத்தில் இருந்து வரும் இயற்கை பானம் “கள்” விற்பனைக்கு அனுமதி தராத அரசு-செயற்கை மதுபான விற்பனைக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது ஏன்?
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மது இல்லா தமிழகம் என்று பாதயாத்திரை பல உண்ணாவிரத போராட்டங்களை நடத்தியவர். அவரின் எண்ணங்கள் ஈடேற தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மதுக்கடைகளை மூடிட காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுக்காதது இரட்டை வேடத்தையே காண்பிக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் மந்திரிகள் கல்லா கட்ட மதுக்கடைகளை திறக்க என்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் திறக்க உத்தரவிட்டது மக்களின் வாழ்வை மேலும் சீரழிக்கும்.
ப சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் பெருந்தலைவர் காமராஜர் பெயரை தயவுசெய்து உச்சரித்து அவரை அவமானப்படுத்த வேண்டாம் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்… என்று இராம இரவிக்குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.