தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், பாரத மாதாவுக்கு என தனியாகக் கோயில் கட்டி, அதில் பாரத மாதாவையே வழிபடும் தெய்வமாக அமைக்க வேண்டும். பாரதமாதாவையே தெய்வமாக வணங்கினால், சமய வேறுபாடுகளைக் கடந்து, மக்களை ஒன்றிணைக்க முடியும். இந்த தேசம் ஒன்றுபடும். இந்தக் கோயிலில் அர்ச்சகருக்கு வேலை இல்லை. இங்கே கிடைக்கப் பெறும் பணத்தைக் கொண்டு, ஏழைகளுக்கு தொழிற்சாலைகள் அமைப்போம். இப்படிக் கனவு கண்டவர், சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா.
அவரது பெரும் கனவு நனவாகவில்லை. ஆனால், அதே பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவில்லம் என தமிழக அரசு அமைத்தது. அப்படி பாரத அன்னைக்கு கோயில் கட்ட விரும்பிய, சுப்பிரமணிய சிவாவின் , 140வது பிறந்த நாள் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி, சுப்ரமணிய சிவாவின் 140 வது பிறந்தநாள் விழா, தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே, ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள, தியாகி, சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில், தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கோட்டாட்சியர் கீதா ராணி கலந்துகொண்டு, தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, சுப்பிரமணிய சிவா படத்திற்கும், நினைவுத் தூணுக்கும் மாலை அணிவித்து, மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.
இதில் தருமபுரி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.