இந்தியா மேற்கு இந்திய தீவுகள் இரண்டாவது ஒருநாள் போட்டி
ஷாய் ஹோப் 100ஆவது போட்டியில் 100
– கே.வி. பாலசுப்பிரமணியன் –
மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (311/6, ஷாய் ஹோப் 115, நிக்கோலஸ் பூரன் 74, கைல் மேயர்ஸ் 39, ப்ரூக்ஸ் 35, ஷர்துல் தாகூர் 3/54) இந்திய அணி (312/8, அக்சர் படேல் ஆட்டமிழக்காமல் 64, ஷ்ரேயாஸ் ஐயர் 63, சஞ்சு சாம்சன் 54, ஷுப்மன் கில் 43, தீபக் ஹூடா 33, அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ் தலா இரண்டு விக்கட்டுகள்) இரண்டு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஒரு மாற்றம். பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஆவேஷ்கான் அணியில் இடம் பெற்றார். மே.இ. தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் அற்புதமாக ஆடினர். 10 ஓவர் முடிவில் அந்த அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 71 ரன் எடுத்திருந்தது. முகம்மது சிராஜ், தீபக் ஹூடா, அக்சர் படேல் ஆகிய மூவரும் சிறப்பாக பந்து வீசினர்.
ஆனால் மூன்று விக்கட் எடுத்தது என்னவோ ஷர்துல் தாகூர்தான். தன்னுடைய நூறாவது ஆட்டத்தில் நூறு ரன் அடித்த ஷாய் ஹோப் மிக மெதுவாக ஆடினார். ஆனால் 48.5 ஓவர் வரை ஆடினார். ஆனால் நிக்கோலஸ் பூரனும் பிற மே.இ. தீவுகள் அணி வீரர்களும் நன்றாக ஆடினார்கள்.
50 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு மே.இ. தீவுகள் அணி 311 ரன் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடவந்த இந்திய அணியின் அணித்தலைவர் ஷிகர் தவான் 11 ஓவர்கள் ஆடி ஆட்டமிழந்தார். ஆனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 42 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் ஷுப்மன் கில் (43), ஷ்ரேயாஸ் ஐயர் (63), சஞ்சு சாம்சன் (54), தீபக் ஹூடா (33) ஆகியோர் சிரப்பாக ஆடி இந்திய அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.
இருந்தாலும் வெற்றிக்கு கடைசி 10 ஓவரில் 100 ரன் தேவைப்பட்டது. அப்போது அக்சர்படேல் 4 ரன்னுடனும் ஹூடா 18 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இடையில் ஒன்பதாவது ஓவர் வீசி முடித்திருந்த நிலையில் 15 நிமிடங்களுக்கு மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
45ஆவது ஓவர் முதல் பந்தில் ஹூடா ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 256. அக்சர் படேல் 31 ரன் எடுத்திருந்தார். அப்போது 36 பந்துகளில் 56 ரன் எடுக்கவேண்டியிருந்தது. அக்சர் படேலின் அதிரடி ஆட்டத்தால் (64 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இந்திய அணி 49.4 ஓவரில் 312 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக அக்சர் படேல் அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.