உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினைந்தாம் நாள் – 30.10.2022
முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
இன்று குரூப் 2 பிரிவில் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. வங்கதேச அணி ஜிம்பாபே அணியை எதிர்த்து பிரிஸ்பேன் மைதானத்திலும், பெர்த் மைதானத்தில் நெதர்லாந்து பாகிஸ்தான் அணிகளும், இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளும் விளையாடின.
முதல் ஆட்டம்: வங்கதேசம்-ஜிம்பாபே
வங்கதேச அணி (150/7, நஜ்முல் ஹொசேன் 71, அஃபிஃப் ஹொசேன் 29, ஷாகிப் 23, ரிச்சர்ட் 2/24, முசர்பானி 2/13) ஜிம்பாபே அணியை (147/8, சீன் வில்லியம்ஸ் 64, ரியான் பர்ல் 27, டஸ்கின் அகமது 3/19) மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சௌம்ய சர்கார் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் நஜ்முல் (71 ரன்), லிட்டன் தாஸ் (14 ரன்), ஷாகிப் (23 ரன், அஃபிஃப் (29 ரன்) ஆகியோருடன் இணைந்து 17ஆவது ஓவர் வரை விளையாடி அணியின் ஸ்கோரை 122 ரன் வரை கொண்டு வந்தார். இதனால் வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது.
இதன் பின்னர் ஆட வந்த ஜிம்பாபே அணியில் இரட்டை இலக்க ரன்கள் எடுத்தவர்கள் மூவர் மட்டுமே; சீன் வில்லியம்ஸ் 64, சக்பாவா 15, ரியான் பர்ல் 27. மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னோடு ஆட்டமிழந்தனர். கடைசி பந்தில் முசர்பானிக்கு, முசத்தக் வீசிய பந்தில் முசர்பானி ஸ்டம்ப்ட் அவுட்டானார்; ஆனால் வங்கதேச விக்கட் கீப்பர் பந்து தன்னிடம் வரும் வரை காத்திருக்காமல், பந்து பேட்டருக்கும் விக்கட்டுக்கும் இடையில் இருக்கும்போது பந்தைப் பிடித்து ஸ்ட்ம்பிங் செய்துவிட்டார்.
வங்கதேச அணி தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்து, மைதானத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டது. அதன் பின்னர் அந்தப் பந்து நோபாலாக அறிவிக்கப்பட்டு, வீரர்கள் மீண்டும் மைதானத்திற்கு வந்து கடைசிப் பந்தை மீண்டும் வீசினர். அச்சமயத்தில் ஜிம்பாபே மூன்று ரன் எடுத்தால் வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தது, ஆனால் அந்தப் பந்தில் ஜிம்பாபே வீரர் ரன் எடுக்க முடியவில்லை. எனவே வங்கதேசம் வெற்றிபெற்றது.
இரண்டாவது ஆட்டம் நெதர்லாந்து-பாகிஸ்தான்
நெதர்லாந்து அணி (91/9, காலின் ஆக்கர்மென் 27, ஷதாப் கான் 3/22) பாகிஸ்தான் அணியிடம் (13.5 ஓவரில் 95/4, ரிஸ்வான் 49, க்ளோவர் 2/22) ஆறு விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றிபெற்ற ஓர் ஆட்டம் இது.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து அணி வீரர்கள் 20 ஓவருக்கு ஒன்பது விக்கட் இழப்பிற்கு 91 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பேறவேண்டும் பிற அணிகளும் மோசமாகத் தோற்கவேண்டும்.
மூன்றாவது ஆட்டம் இந்தியா-தெ ஆப்பிரிக்கா
இந்திய அணி (133/9, சூர்யகுமார் யாதவ் 68, பர்னெல் 3/15, நிகிடி 4/29) தென் ஆப்பிரிக்க அணியிடம் (19.4 ஓவரில் 137/5, டேவிட் மில்லர் 59, மர்க்ரம் 52, அர்ஷதீப் 2/25) தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடியது. இந்திய அணியின் மிகப் பெருமைபெற்ற பேட்டர்கள் ரோஹித் ஷர்மா (15 ரன்), கே.எல்.ராகுல் (9 ரன்), விராட் கோலி (12 ரன்), தீபக் ஹூடா (பூஜ்யம்), ஹார்திக பாண்ட்யா (2 ரன்), தினேஷ் கார்த்திக் (7 ரன்) ஆகியோர் இன்று பயங்கரமான ஃபெயிலியர். 20 ஓவரில் 133 ரன் எடுத்ததே பெரிய விஷயம்.
பின்னர் ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி இந்த எளிமையான இலக்கை அடைய கொஞ்சம் சிரமப்பட்டது. இருந்தாலும் இந்திய பந்துவீச்சும் வீக்காகத்தான் உள்ளது என்பதை நமது பந்துவீச்சாளர்கள் நிருபித்தார்கள். அஷ்வின் இன்று பந்துவீச்சில் ரன்களை வாரிவழங்கிவிட்டார்.
இந்த வெற்றியால் தென் ஆப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், இந்திய அணி இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. அடுத்து இந்திய அணி வங்கதேச அணியோடு நவம்பர் 2ஆம் தேதி அடிலெய்டிலும் நவம்பர் ஆறாம் தேதி ஜிம்பாபே அணியுடன் பிரிஸ்பேனிலும் ஆடவுள்ளது.