![அமெரிக்காவிலும் போய்… மாட்டுக்கு தீவனம் கொடுத்த ‘விவசாயி’ எடப்பாடி பழனிசாமி! 1 edappadi london1](https://dhinasari.com/wp-content/uploads/2019/09/edappadi-london1.jpg)
அமெரிக்காவின் பஃபல்லோ நகருக்கு அருகே கால்நடைப் பண்ணையைப் பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள தொழில்நுட்பங்களை நேரில் கேட்டறிந்ததுடன், மாட்டுக்கு அன்புடன் தீவனமும் கொடுத்து மகிழ்ந்தார்.
அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க்கில் இருந்து பஃபல்லோ நகருக்குச் சென்றார்.
விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் வரவேற்றனர். பின்னர், ஓக்ஃபீல்ட் என்ற இடத்தில் உள்ள கால்நடைப் பண்ணையை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, பல்வேறு நாட்டு இன மாடுகளின் மரபணு பராமரிப்பு மற்றும் மரபணுவைக் கொண்டு அதிகமாக பால் தரக்கூடிய மாட்டு இனங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி உடைய புதிய ரக மாடுகள், ஆடுகளை உருவாக்குதல், பால், இதரப் பொருட்களைப் பதப்படுத்துதல், கால்நடைகள் பராமரிப்பு, தீவனம், பண்ணைப் பதிவேடு முறைகள், சிகிச்சை என பலவற்றை அவருக்கு விளக்கினர்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள கால்நடைப் பூங்காவில் இத்தகைய நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது குறித்து அவர் கேட்டறிந்தார்.
முதல்வருடன், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்