![வனப்பகுதியுடன் வடிவமைக்கப் பட்டுள்ள கால்பந்து மைதானம் திறப்பு! 1 football ground](https://dhinasari.com/wp-content/uploads/2019/09/football-ground-1024x598.jpg)
ஆஸ்திரியாவில் வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான கால்பந்து மைதானம் என பெயர் பெற்றுள்ளது ஆஸ்திரியாவில் உள்ள “பார் பாரஸ்ட்” என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள மைதானம். இது, வனப்பு மிகுந்த வனப்பகுதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுடன், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
கிளஜன்பர்ட் நகரில் 30 ஆயிரம் அரங்குகள் கொண்ட மைதானத்தின் நடுவில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளன. காலநிலை பருவ மாற்றம் மற்றும் காடுகளின் அழிவுகளை பார்க்கும்போது எதிர்காலத்தில் இயற்கையை ஏதேனும் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் பூங்காக்களாக மட்டுமே காணக் கூடிய நிலை வரலாம் என்ற அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், சூற்றுச்சூழல் மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கிளாஸ் லிட்மேன் என்பவர் இந்த மைதானத்தை வடிவமைத்துள்ளார். பசுமையான மரங்கள் மையத்தில் வசீகரித்தபடி அமைந்திருக்க, மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளி திரைகளில் பெண்கள் பாடுவது, வயலின் வாசிப்பது போன்ற காட்சிகள் திரையிடப்படுகின்றன.
கண்ணுக்கு பசுமை விருந்தளிக்கும் இந்த கால்பந்து மைதானத்தில் பார்வையாளர்கள் குடும்பத்துடன் வந்து பொழுதைக் கழித்து, களித்துச் செல்கின்றனர்.
ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மேக்ஸ் பீன்ட்னர் என்பவர் 1970ம் ஆண்டில் வரைந்த ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கால்பந்து மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கால்பந்து மைதானத்தை கண்டு களிக்க, அக்டோபர் 27ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவராம்!