![குற்றாலத்தில்… அருமையான புதிய அருவி… ஆனால் அழிவின் விளிம்பில்! கரடி அருவியைக் காப்பாத்துங்க.. ப்ளீஸ்! 1 courtallam karadifalls6](https://dhinasari.com/wp-content/uploads/2019/10/courtallam-karadifalls6.jpg)
அழிவின் விளிம்பில் உள்ளது, குற்றாலத்தில் புதியதாக உதயமாகிக் கொண்டிருக்கும் கரடி அருவி. வனத்துறையினர் இதனைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்!
குற்றாலத்திற்கு சுற்றுலா வரும் விவிஐபி., பயணிகள் குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் கூட்டத்தோடு கூட்டமாக குளித்து முடித்துவிட்டு கடைசியாக ஹாய்யாக தனிமையில் குளிக்க, கரடி அருவிக்கு வருகின்றனர்.
குற்றாலத்தில் முன்னர் ஐந்தருவிக்கு மேல் உள்ள பழத்தோட்ட அருவியில் குளிக்க அதுபோல் விஐபி.,கள் வருவதுண்டு. இதற்காக வருவாய்த்துறை, வனத்துறை அனுமதியெல்லாம் பெற்றுக் கொண்டு விஐபி.,க்கள் செல்வர். ஆனால் இப்போது அது தடை செய்யப் பட்டு விட்டதால், கரடி அருவியை நோக்கி படை எடுக்கின்றனர் பலர்.
குற்றாலம்- ஐந்தருவி மெயின் ரோட்டின் இடதுபுறம் உள்ள கரடி அருவி, வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த காட்டுப் பகுதிகளிலிருந்து வனவிலங்குகள் கீழே இறங்காமல் இருக்க தமிழக அரசு வனத்துறை மூலம் மின்வேலி அமைத்துள்ளது.
![குற்றாலத்தில்… அருமையான புதிய அருவி… ஆனால் அழிவின் விளிம்பில்! கரடி அருவியைக் காப்பாத்துங்க.. ப்ளீஸ்! 2 courtallam karadifalls story1](https://dhinasari.com/wp-content/uploads/2019/10/courtallam-karadifalls-story1.jpg)
மின் வேலி அமைக்கப் பட்டுள்ளதால், அருவிப் பகுதியைக் கடந்து எவரும் மேலே செல்ல முடியாது. குறிப்பாக, இந்த அருவிப் பகுதிக்கே செல்வது இயலாத காரியம்தான். என்றாலும், வேலியைக் கடந்து பலர் வனத்துறையினருக்குத் தெரியாமல் அருவிப் பகுதிக்குச் செல்கின்றனர் என்று கூறப் படுகிறது.
பொதுவாக, கரடி அருவியில் குளிக்க வருபவர்களுக்கு வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால், சிலர் வனத்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கரடி அருவிக்கு வந்துவிடுகின்றனர். இங்கே “உற்சாக’க் குளியல் நடத்துவது பலருக்கு வாடிக்கையாக உள்ளது.
உற்சாகம் என்றால்… வழக்கம் போல் சரக்கு பாட்டில் கொண்டாட்டம்தான்! அதற்காகவே இங்கே பலவித தடைகளையும் தாண்டி வருகின்றனர். மின்வேலியை வளைத்து, அருவிப் பகுதிக்குள் வந்து குளிப்பதுடன், மது அருந்தி விட்டு, கண்ணாடி பாட்டில்களை ஆங்காங்கே போட்டு விடுகின்றனர்.
![குற்றாலத்தில்… அருமையான புதிய அருவி… ஆனால் அழிவின் விளிம்பில்! கரடி அருவியைக் காப்பாத்துங்க.. ப்ளீஸ்! 3 courtallam karadifalls story2](https://dhinasari.com/wp-content/uploads/2019/10/courtallam-karadifalls-story2.jpg)
அவற்றில் பலவற்றை தூர எறிந்து பாறைக் கற்களில் பட்டு உடைத்தும் போடுகின்றனர். இதனால் ஆங்காங்கே கண்ணாடிச் சில்லுகள் உடைந்து, கூராக நிமிர்த்திக் கொண்டு, வருபவரின் கால்களைப் பதம் பார்க்க காத்திருக்கின்றன. இவை, மனிதர்களை மட்டுமல்ல…. இங்குள்ள வன விலங்குகளின் கால்களையும் பதம் பார்த்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் இவை இங்கே நிறைந்திருக்கின்றன.
இவை, வனத்துறையினருக்கு தெரியாமல் மட்டும் நடக்கவில்லை என்று குற்றம் சாட்டும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மதுபான மொடாக்குடியர்கள் மற்றும் ஆயில் பாத் ஆயில் மசாஜ் செய்யக் கூடிய நபர்கள் என, பணம் படைத்தவர்கள் வனத்துறை அனுமதியோடுதான் உள்ளே நுழைகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
வனத்தைப் பாதுகாக்க வேண்டிய வன பாதுகாவலர்கள் பணத்துக்காக இப்படி வனச் சூழலைக் கெடுக்க உடந்தையாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கதும், கண்டனத்துக்கு உரியதும் ஆகும் என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்!
![குற்றாலத்தில்… அருமையான புதிய அருவி… ஆனால் அழிவின் விளிம்பில்! கரடி அருவியைக் காப்பாத்துங்க.. ப்ளீஸ்! 4 courtallam karadifalls story3](https://dhinasari.com/wp-content/uploads/2019/10/courtallam-karadifalls-story3.jpg)
பொதுவாக, குற்றால அருவிப் பகுதிகளில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என்பது 2014ஆம் வருடம் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் படி, குற்றால அருவியை ஒட்டிய பகுதிகளில் சோப்பு, ஷாம்பு விற்பனை செய்யும் கடைகள் அகற்றப் பட்டன. எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் நபர்களும் அங்கே அனுமதிக்கப் படுவதில்லை.
ஆனால், இந்த விஐபி., அருவியான கரடி அருவியிலோ, இவை எல்லாம் உண்டு. வருபவர்கள் வரும்போதே ஆயில் மசாஜ் செய்து விடுவதற்கு ஆட்களையும் அழைத்துக் கொண்டு வந்துவிடுகின்றனர். இங்கே நீதிபதியின் உத்தரவு அப்பட்டமாக மீறப் படுகின்றது என்பதுடன், அருவியையும் நாசப் படுத்தி, வன விலங்குகளுக்கும் அபாயகரமான சூழலை ஏற்படுத்தி விடுகின்றனர்.
எனவே, இனியாவது இந்த அருவியை பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.