வரும் 2021-ஆம் ஆண்டில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கலைத்துறை சேவைக்காக வழங்கிய விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் கோவாவில் இருந்து சென்னைக்குத் திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தாம் வாங்கிய விருதுக்கு தமிழ் மக்கள்தான் காரணம், அந்த விருதை தமிழ் மக்களுக்கே தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என்றார்.
செய்தியாளர்கள் அப்போது, கமல்ஹாசனுடன் இணைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி வருகிறதே என்று கேட்டனர். அதற்கு அவர், அதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை என்றார்.
கமலும், ரஜினியும் இணைவது ஜீரோவும் ஜீரோவும் இணைவதற்கு சமம் என விமர்சனங்கள் எழுந்துள்ளதே! மேலும் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே என்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ரஜினி, வரும் 2021-ஆம் ஆண்டில் அரசியலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் நிகழ்த்துவார்கள் என்று ஆரூடம் தெரிவித்தார். அப்போது கூடியிருந்த ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கை தட்டி மகிழ்ந்தனர்.