எட்டு இளம்பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் 23 வயதான சந்தோஷ். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஐந்து மாதங்களுக்கு முன் ஒரத்தநாடு அருகே கருவிழிகாடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான சத்யா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் காதல் மனைவியுடன் திருப்பூரில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்ற சந்தோஷ் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா திருப்பூர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே சந்தோஷ் திருப்பூரைச் சேர்ந்த 19 வயதான சசிகலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கே குடும்பம் நடத்தி வருவதாக சத்யாவுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சத்தியா கீழையூர் சென்றுள்ளார்.
அங்கே சந்தோஷிடம் சென்று கேட்டபோது அவர் பதில் எதுவும் அளிக்காமல் சத்யாவை திருப்பி அனுப்பியுள்ளார். இதையடுத்து சத்யா ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்டு சந்தோஷைக் கைது செய்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சந்தோஷ் இளம் பெண்களை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்துகொண்டு சில மாதங்கள் மட்டும் குடும்பம் நடத்தி அவர்களிடம் இருக்கும் நகை பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விடுவது தெரியவந்தது!
இதேபோல் மேலும் 7 இளம்பெண்களை ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. தகவல் அறிந்து நான்கு பெண்கள் தம் பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷன் வந்து கதறி அழுதனர். இது குறித்து சந்தோஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது!