முதியோர் இல்லத்தில் இருந்து மழை நீர் வெளியேறும் பிரச்னையைக் காரணம் காட்டி, முதியோர் இல்லம் ஒன்றை முடக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டுகின்றனர், அந்தப் பகுதியில் உள்ள சிலர்!
சென்னை குரோம்பேட்டை நன்மங்கலம் சத்யசாய் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் செயல்பட்டு வருகிறது ஒரு முதியோர் இல்லம். இந்த முதியோர் இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட முதியோர் பராமரிக்கப் பட்டு வருகின்றனர்.
பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் இந்த முதியோர் இல்லத்தில் இருந்து மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேறி, தெருவில் ஓடுவதாக அப்பகுதியில் உள்ள சிலர் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இது குறித்து முதியோர் இல்லத்தில் நாம் விசாரித்தபோது, மழைக்காலத்தில் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் திடீரென ஏரியைத் திறந்துவிடும்போது, மழை நீர் நம் விடுதி வழியாகத்தான் வருகிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் முதியோர் இல்லத்தின் பயன்பாட்டுக்கான நீர் உள்ளேயே பூச்செடிகளுக்கும், நிலத்தடிக்கும் விடப் படுகிறது. ஆனால் மழைக்காலத்தில் நம் விடுதி வழியே தான் தண்ணீர் வந்து, அதுவே வழிந்து தெருவில் செல்கிறது.
புகார் சொல்பவர்கள், உள்ளே வந்து பார்த்து நிலைமையை ஆராயட்டும், அது இல்லாமல் இவ்வாறு குறை சொல்வது தவறு என்கின்றனர்.
இதனிடையே, புகார் சொல்லும் அடுத்த தெருவில் உள்ளவர்கள் ஊடகங்களை அழைத்து, இந்த விடுதியால் எங்களுக்கு சிரமம், இதை உடனே மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் இங்குள்ளவர்கள்.