ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை வென்று கோப்பையைப் பெற்றது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது போட்டியினை இந்தியா வென்றது. இதை அடுத்து இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டி போன்ற விறுவிறுப்பில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் வார்னர், கேப்டன் பின்ச் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். வார்னர் (3) , பின்ச் (19) ரன் என ஆட்டம் இழந்தனர்.
லபுசேன் (54) ஸ்டீவ் ஸ்மித் (131) நடுவில் கைகொடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
287 ரன் என்ற வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் அளித்தது. ராகுல் 19 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோகித் சர்மா ஒரு நாள் அரங்கில் 29வது சதம் அடித்தார். கோலி அரை சதம் கடந்தார்.
ரோகித் (119) ரன்னிலும், கோலி 89 ரன்னிலும் ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே பவுண்டரி அடிக்க இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதை அடுத்து, இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.