மூன்றாவது டி-20 போட்டியில் அசத்திய இந்திய அணி ‘சூப்பர் ஓவரில்’ சூப்பராக அசத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ‘டி-20’ தொடரை வென்று சாதித்துள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நடந்தது.
3வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸன், பீல்டிங் தேர்வு செய்தார். இதை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் இருவரும் நன்கு ரன் எடுத்தனர். ராகுல் 29 ரன்னும், ரோகித் சர்மா 65 ரன்னும் எடுத்தனர். துபேயும் (3), ஸ்ரேயாஸ் (17), கோலி (38) என ரன் எடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது.
180 ரன்னை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு குப்டில், மன்ரோ சரியாகக் கைகொடுக்கவில்லை. குப்டில் 31 ரன்னும் மன்ரோ (14) ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சான்ட்னர் 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் வில்லியம்சன் அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி பயணித்தது. கிராண்ட்ஹோம் 5 ரன்னில் ஆட்டமிழந்த போதும், கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. ஷமி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த ராஸ் டெய்லர், அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். 3வது பந்தில் வில்லியம்சன் (95) ஆட்டம் இழந்தார். 4, 5வது பந்தில் செய்பெர்ட் ஒரு ரன் மட்டும் எடுத்தார். கடைசி பந்தில் ராஸ் டெய்லர் (17) போல்டாக. நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. இரு அணிகளும் ஒரே ரன் எடுத்ததால், போட்டி சமனில் முடிந்தது.
இதை அடுத்து ‘சூப்பர்’ ஓவர் விளையாடப் பட்டது. முதலில் நியூசிலாந்து களம் இறங்கியது. இந்தியா சார்பில் பும்ரா பந்து வீசினார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன், குப்டில் களமிறங்கினர். வில்லியம்சன் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 17 ரன் எடுத்தது.
18 ரன் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா, ராகுல் இணை, நிதானமாக எதிர்கொண்டது. முதல் 2 பந்தில் ரோகித் 3 ரன் எடுத்தார். 3வது பந்தில் ராகுல் பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது! அப்போது ஆட்டத்தின் திருப்பு முனையாக, 5,6 ஆவது பந்தில் ரோகித் சிக்சர்களை அடித்து, ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றார். இதனால் இந்தியா ‘சூப்பர்’ ஓவரில் சூப்பர் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ‘டி-20’ தொடரையும் வென்று அசத்தியது.
இது குறித்து கூறிய இந்திய கேப்டன் கோலி, ஆட்டத்தின் போக்கு கைவிட்டுப் போய்விட்டது என்று நினைத்த நேரத்தில் சரியான திசையில் வெற்றி வசப்பட்டது என்றார். இந்தப் போட்டியின் மூலம் தொடக்க வீரராகக் களம் இறங்கி ரோஹித் சர்மா 10 ஆயிரம் ரன் கடந்த வீரர் ஆனார்.