நீலகிரி மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 513ஆக அதிகரித்துள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி திருமணம் உள்ளிட்ட தனிநபர் நிகழ்ச்சிகளை நடத்தினால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை பின்பற்றாத தனிநபர்கள் மீது 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், முகக்கவசம் அணியாமலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.