பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மே மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்’ என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள், 5,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தோம்.
இப்போது, 10வது கல்வியாண்டு துவங்கிவிட்டது. ஆனாலும், 7,700 ரூபாய் சம்பளத்தோடு, 12 ஆயிரத்து, 544 ஆசிரியர்களே பணிபுரிகிறோம். அரசாணைப்படி, ஒரு பகுதி நேர ஆசிரியர், மாதத்திற்கு, 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது.
அந்த வகையில், ஒவ்வொரு பகுதி நேர ஆசிரியரும், அதிகபட்சமாக, நான்கு பள்ளிகளில் பணிபுரியலாம். இதை நடைமுறைப்படுத்தி இருந்தால், ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாதம் அதிகபட்சம், 30 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்கும். இதை அரசு செயல்படுத்தவில்லை. மேலும், ஆண்டு முழுவதும் சம்பளம் வழங்கவே, 99 கோடியே, 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, 110 விதியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. மே மாத ஊதியம் மறுக்கப்படுகிறது. இந்த கொரோனா காலத்தில், மே மாத சம்பளத்தை வழங்க வேண்டும்.
10வது கல்விஆண்டில் பணிபுரியும் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.