ஊரடங்கால் கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் சிக்கிய ஸ்பானிஷ் பெண் விவசாயம், ரங்கோலி உள்ளிட்டவற்றை கற்று அசத்தி வருகிறார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் சொரைனோ. அவருக்கு கார்லோஸ் என்ற அண்ணன் உள்ளார். கார்லோஸுக்கு இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் நண்பராக இருந்துள்ளார். கார்லோஸ் மற்றும் கிருஷ்ணாவிடம் இருந்து இந்தியா பற்றிய பல நல்ல விஷயங்களை கேள்விப்பட்ட பின்னர் இந்தியாவில் சுற்றுலா செல்ல வேண்டும் என்று சொரைனோ முடிவெடுத்துள்ளார்.
அதனை அடுத்து, அவருடைய ஆண் நண்பருடன் கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்துள்ளார் சொரைனோ. கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் ஹெராஞ்சல் பகுதியில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டில் சொரைனோ மற்றும் அவரது நண்பர் தங்கி இருந்தனர். அவர்கள் இருவரும் இந்தியா வந்த சில தினங்களிலேயே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, சொரைனோவின் ஆண் நண்பர் தனியாக ஸ்பெயினுக்கு திரும்பியுள்ளார்.
ஆனால், சொரைனோவிற்கு கோவாவிற்கு சென்று பின்னர் ஸ்பெயின் சென்று கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதனை அடுத்து சில தினங்களுக்கு பின்னர் கோவா செல்லலாம் என்று சொரைனோ முடிவெடுத்துள்ளார். ஆனால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவரால் ஹெராஞ்சல் பகுதியை விட்டு வேறெங்கும் செல்ல முடியவில்லை. சுமார் 3 மாதங்களாக அந்த பகுதியிலேயே தங்கி இருக்கிறார் சொரைனோ.
பொழுதுபோக்குக்காக அப்பகுதி கிராமத்தினர் செய்யும் சில முக்கியமான வேலைகளையும் சொரைனோ கற்றுள்ளார். நெற் பயிர் விளைவிப்பது, தென்னங்குச்சியை வைத்து விளக்குமாறு செய்வது, ரங்கோலி கோலம் போடுவது போன்றவற்றை கற்றுக் கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் கன்னட மொழியும் பேசக் கற்றுள்ளார்.
இதுகுறித்து சொரைனோவிடம் கேட்டபோது, “கிராமத்தில் நான் என்னுடைய நேரத்தை செலவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். இப்பகுதி மக்கள் மிகுந்த அன்புடன் நடத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.